Publish Date: Mon, 25 Nov 2024 (14:25 IST)
Updated Date: Mon, 25 Nov 2024 (14:37 IST)
2024 ஆம் ஆண்டு இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கோலிக்கு ஒரு சோகமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள்தான் சேர்த்திருந்தார். இந்நிலையில்தான் ஆஸ்திரேலிய தொடரில் கோலி கலந்துகொண்டார். அதனால் அவர் மேல் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இருக்கவில்லை.
ஆனால் ஆஸ்திரேலியாவில் எப்போதுமே கோலி மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து வந்துள்ளார். அதனால் அவர் தன்னுடைய ஃபார்மை மீட்டுக்கொள்ள இந்த தொடர் உதவும் என்றும் அவருக்கு ஆதரவாக கருத்துகளும் எழுந்தன.
அதேபோல தான் நடந்தது. பெர்த் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 5 ரன்களில் அவுட் ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் பெர்த் டெஸ்ட் வெற்றிக்குப் பின்னர் பேசிய கேப்டன் பும்ராவிடம் “கோலி மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பும்ரா “கோலி ஃபார்முக்கு திரும்பியுள்ளாரா? அவர் ஃபார்ம் அவுட் ஆனதாக நாம் நம்பவில்லை. பேட்ஸ்மேன்கள் சவாலான விக்கெட்களில் விளையாடுகிறார்கள். அதனால் நாம் பேட்ஸ்மேன்களை ஃபார்மில் இருக்கிறாரா இல்லை ஃபார்மில் இல்லையா என்பதை நாம் கணிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.