Publish Date: Sat, 16 Aug 2025 (11:22 IST)
Updated Date: Sat, 16 Aug 2025 (11:25 IST)
இந்திய அணியின் நட்சத்திர பவுலரான பும்ரா, பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக உள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் மற்றும் முதுகுவலிப் பிரச்சனைகள் காரணமாக அவரால் தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியவில்லை. அவரது காயங்களுக்குக் காரணம் அவரின் தனித்துவமான பந்து வீசும்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ரா சிறப்பாக பந்துவீசி விக்கெட்களைக் கைப்பற்றினாலும் அவர் இருக்கும் போட்டிகளில் இந்திய அணி தோல்விகளையேப் பெறுகிறது. சமீபத்தில் நடந்த ஆண்டர்சன் –டெண்டுல்கர் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இது குறித்து அவர் மேல் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் பும்ரா குறித்து இந்திய அணி பவுலரான புவனேஷ்வர் குமார் ஆதரவாகப் பேசியுள்ளார். அதில் “பும்ரா அனைத்துப் போட்டிகளிலும் விளையாடாதது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் அவர் விளையாடும் போட்டிகளில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவர். அவர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் அவர் எத்தனை விக்கெட் எடுத்துள்ளார் என்பதைப் பாருங்கள். ஒரு வீரர் அதுவும் பும்ரா போன்ற பவுலர் அனைத்து விதமான போட்டிகளிலும் இத்தனை ஆண்டுகள் விளையாடுவது சாதாரணமானதில்லை.” எனக் கூறியுள்ளார்.