இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்ததை அடுத்து பிசிசிஐ, வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் ஒன்றுதான் வெளிநாட்டு தொடர்களின் போது குடும்பத்தினர் வீரர்களுடன் தங்குவது சம்மந்தமான கட்டுப்பாடு. குடும்பத்தினர் வீரர்களோடு இரண்டு வாரங்கள் மட்டுமே தங்க முடியும் என்று கட்டுப்பாட்டை விதித்தது.
இதற்கு வீரர்கள் வெளிப்படையாக எதிர்ப்பைத் தெரிவிக்காவிட்டாலும் கோலி உள்ளிட்டவர்கள் அதிருப்தியை வெளியிட்டனர் . இதற்கிடையில் துபாயில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரையும் இந்தியா வென்றதால் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா புதிய விதிமுறைகளில் எந்த தளர்வும் இருக்காது என அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “தற்போதைய விதிமுறைகள் அப்படியே தொடரும். இது தேசத்துக்கும் எங்களுக்கும் முக்கியமானது. ஜனநாயக அமைப்பில் எல்லோருக்கும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த உரிமையுண்டு. இது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் பொருந்தும்” எனக் கூறியுள்ளார்.