கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இந்திய அணி படுமோசமாக இழந்ததே அதற்கு சாட்சி.
அந்த தொடரில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியும் பேட்டிங்கும் மோசமாக இருந்தது. இதன் காரணமாக அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து தானாகவே விலகிக் கொண்டார். இந்நிலையில் தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த முடிவை ரோஹித் அறிவித்துள்ளார். இதற்கிடையில் விராட் கோலியும் ஓய்வை அறிவித்ததால் இந்திய அணியில் பெரும் வெற்றிடம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் கேப்டன்சி பொறுப்பு ஷுப்மன் கில்லுக்கும், துணைக் கேப்டன் பொறுப்பு ரிஷப் பண்ட் வசமும் ஒப்படைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் “இந்திய அணியில் தற்போது சீனியர் வீரர் ஜடேஜாதான். அதனால் அவரும் கேப்டன் பட்டியலில் இருப்பார். புதிய வீரரைக் கேப்டனாகக் கொண்டுவர வேண்டும் என நினைத்தால் அவரை 2 ஆண்டுகள் துணைக் கேப்டனாக செயல்படவிடவேண்டும். அதுவரை ஜடேஜா கேப்டன்சி வேலையை செய்வார்” எனக் கூறியுள்ளார்.