Publish Date: Tue, 09 Apr 2024 (09:31 IST)
Updated Date: Tue, 09 Apr 2024 (09:37 IST)
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் சி எஸ் கே அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி சிஎஸ்கே பவுலர்களின் தாக்குதலை தாங்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர்.
இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 34 ரன்கள் எடுத்திருந்தார். இந்த எளிய இலக்கை துரத்திய சி எஸ் கே அணி18 ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் சிறப்பாக விளையாடி 67 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்த சீசனில் முதல் தோல்வியை தழுவியுள்ளது கொல்கத்தா.
இந்த போட்டியில் கடைசி கட்டத்தில் பேட்டிங் இறங்கிய சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தோனி ஒரு ரன் மட்டுமே சேர்த்தார். ஆனாலும் அவர் பேட் செய்ய களமிறங்கிய போதும், பேட் செய்த போதும் ரசிகர்கள் காது கிழியும் அளவுக்கு கோஷம் எழுப்பினர். அப்போது ஃபீல்ட் செய்து கொண்டிருந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் காதுகளை மூடிக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.