Publish Date: Tue, 18 Feb 2025 (07:10 IST)
Updated Date: Tue, 18 Feb 2025 (07:42 IST)
கடந்த ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மண்ணைக் கவ்வியது. இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடியது அஜிங்க்யா ரஹானேதான். ஆனாலும் 18 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த அவர் அதற்கடுத்த தொடர்களில் அதன் பிறகு இடம்பெறவில்லை.
தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 100 டெஸ்ட்கள் என்னும் மைல்கல்லை எட்ட இன்னும் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். ஆனால் அவருக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் அணியில் தான் இடம்பெறாதது குறித்து பேசியுள்ள ரஹானே “என்னிடம் PR குழு வைத்துக் கொள்ள வேண்டும் என்று என் நண்பர்கள் சொல்வார்கள். ஆனால் நான் அதை அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னிடம் PR குழு இல்லை. ஆனால் செய்திகளில் இடம்பெறுவது எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது. நான் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் எனத் தெரியவில்லை. எனக்காகப் பேசவும் யாருமில்லை. நான் மீண்டும் அணிக்குள் வரக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். அது முடியும் என்றுதான் நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.