Publish Date: Fri, 29 Nov 2024 (08:35 IST)
Updated Date: Fri, 29 Nov 2024 (08:39 IST)
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தார் ரிஷப் பண்ட். அதே போல 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற சிறுவன் 1.1 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது.
இந்த ஏலத்தில் பல அதிர்ச்சிகரமான முடிவுகளை எடுத்தது ஆர் சி பி அணிதான். தங்கள் அணியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் பலரை அந்த அணி மீண்டும் வாங்கவில்லை. அவர்கள் குறைந்த விலையில் ஏலத்தில் சென்றபோதும் RTM செய்யவில்லை. ஆனால் சில புதிய திறமையான வீரர்களை ஆர் சி பி அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
ஆனால் அந்த வீரர்களில் யாரும் ஆர் சி பி அணியை வழிநடத்தும் அளவுக்கு திறமையானவர்களாக அறியப்படவில்லை. இந்நிலையில் ஆர் சி பி அணியின் முன்னாள் வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் தன்னுடைய சேனலில் “நான் சொல்லப்போகும் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் கோலி ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகப் பதவியேற்பார் என நான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.