Publish Date: Tue, 26 Nov 2024 (14:53 IST)
Updated Date: Tue, 26 Nov 2024 (14:58 IST)
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலம் நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தார் ரிஷப் பண்ட். அதே போல 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற சிறுவன் 1.1 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது.
பெரும்பாலான அணிகள் தங்கள் அணியில் முன்பு இடம்பெற்றிருந்த வீரர்களைக் கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டினர். ஆனால் பெங்களூர் அணி தங்கள் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் நியாயமான விலைக்குக் கிடைத்தபோதும் அவர்களைக் கைப்பற்ற ஆர்வம் காட்டவில்லை. இது சம்மந்தமாக அந்த அணி நட்சத்திர ஆட்டக்காரர் கோலி அதிருப்தியுடன் அணி நிர்வாகிகளுக்கு மெஸேஜ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் பெங்களூர் அணியின் இயக்குனர் மோ பாபட் அணித் தேர்வு குறித்து விராட் கோலி சில மெஸெஜ்களை அவருக்கே உண்டான பாணியில் அனுப்பினார் எனக் கூறினார். மேலும் இன்னும் யார் கேப்டன் என்பதைத் தீர்மானிக்கவில்லை என்றும் விரைவில் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இந்த ஆண்டு மீண்டும் கோலி கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.