Publish Date: Mon, 08 Aug 2022 (10:13 IST)
Updated Date: Mon, 08 Aug 2022 (10:14 IST)
இலங்கைக்கு ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டோம் என சீன வெளியுறவு அமைச்சர், இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியிடம் உறுதி அளித்ததாக இலங்கையில் வெளியாகும் தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த செயலும் மேற்கொள்ளப்படமாட்டாது. அத்துடன் நேர்மையான மற்றும் நம்பகமான நண்பராக இருப்பதாக சீனா உறுதியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. சீன அரசவை உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை கம்போடியாவில் சந்தித்தார்.இதன்போதே அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
இதன்போது, சீன அரசாங்கமும் மக்களும் இலங்கைக்கு அவசரகால மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு வழிகள் மூலம் தொடர்ந்து உதவிகளை வழங்குவதாக சீன அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையின் புதிய அரசாங்கம், நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்லும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி, ஒரே சீனா கொள்கையில் இலங்கை உறுதியாக இருப்பதாகவும் சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடும் மற்றும் பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலையும் எதிர்க்கிறது என்றும் குறிப்பிட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.