Publish Date: Thu, 02 Mar 2023 (08:14 IST)
Updated Date: Thu, 02 Mar 2023 (08:22 IST)
வடக்கு கிரீஸ் பகுதியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் மிகவும் மோசமான வகையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 36 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
செவ்வாய் கிழமை இரவு லரிசா நகரத்தின் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துக்கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியது.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து தற்போது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இந்த ரயில் விபத்தின் கோரத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த விபத்து குறித்த தகவல்கள் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக தங்களுக்கு கிடைத்தது என தீயணைப்புத் துறையினர் கூறியுள்ளனர்.
அவர்கள் வந்து பார்த்தபோது பயணிகள் ரயிலின் முதல் இரண்டு பெட்டிகள் விபத்தினால் முற்றிலும் சேதமடைந்து காணப்பட்டுள்ளது
ரயில் விபத்திலிருந்து பிழைத்துள்ளவர்களை தாங்கள் தேடும்போது பல சோகமான காட்சிகளை கண்டதாக மீட்பு படையினர் கூறுகின்றனர்.
”ரயில் பெட்டிகளுக்குள் இருந்து நாங்கள் சிலரை பிடித்து இழுக்கும்போது சிலர் பிழைத்திருந்தனர், சிலர் காயமடைந்திருந்தனர், இன்னும் சிலர் உயிரிழந்திருந்தனர்” என்று விபத்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர் ஒருவர் அம்மாநில அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்திருந்தார்.
மிகவும் சோர்வடைந்திருந்த மீட்பு பணியாளர் ஒருவர் ஏ.ஃப்.பியிடம் (AFP) பேசியபோது, “இதுபோன்ற ஒரு மோசமான விபத்தை தான் இதுவரை பார்த்ததில்லை” என்று தெரிவித்தார்.
இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த எந்தவொரு தெளிவான தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இன்னும் சில பயணிகள் தெசல்லோனிக்கி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
”ரயில்கள் மோதிக்கொண்டதும் பெட்டிகளுக்குள்ளே இருந்த பயணிகளிடையே மிகவும் பதட்டமான நிலை உருவானது” என மீட்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
விபத்து நடந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாதவர்கள் கூறும்போது,”விபத்து நடந்தபோது ரயில் பெட்டிகளின் கண்ணாடிகள் திடீரென வெடித்து சிதறியது” என தெரிவித்துள்ளனர்.
சுமார் 40 ஆம்புலன்ஸ்களோடு, 150 பேர் வரையிலான மீட்பு படையினர் சம்பவ இடத்தில் தங்களது பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.