Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிங்கப்பூரில் கடலில் மிதக்கும் சூரிய சக்தி பண்ணை: 7 கால்பந்து திடல் அளவு பெரியது

சிங்கப்பூரில் கடலில் மிதக்கும் சூரிய சக்தி பண்ணை: 7 கால்பந்து திடல் அளவு பெரியது
, வியாழன், 25 மார்ச் 2021 (09:40 IST)
உலகெங்கும் மின்சாரத்துக்கான மாற்று ஏற்பாடு பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் மிதக்கும் சூரிய சக்தி பண்ணை  அமைக்கப்பட்டுள்ளது.

உலகின் ஆகப்பெரிய சூரிய சக்தி பண்ணைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
 
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது என்பதும், நிலப் பற்றாக்குறை நிலவும் நாடுகளுக்கு ஏற்றதாகவும் சூரிய சக்தி உற்பத்தி திட்டங்கள் கருதப்படுகின்றன. எனவே  சிங்கப்பூர் போன்ற சிறிய நாட்டில் இத்தகைய திட்டங்கள் பரவலாகச் செயல்படுத்தப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
 
கடந்த சில ஆண்டுகளாகவே சூரிய சக்தி உற்பத்தியை சிங்கப்பூர் அரசு ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூர், மலேசியாவுக்கு இடையேயான ஜோகூர்  நீரிணையில், கடல் மீது மிகப் பெரிய சூரிய சக்தி பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
 
மொத்தம் 13,312 சூரிய விசைத் தகடுகளை இணைத்து அமைக்கப்பட்டுள்ள இந்த பண்ணை பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. சரியாகச் சொன்னால் ஏழு கால்பந்து  திடல்களுக்கு சமமான பரப்பளவில் இந்தப் பண்ணையை அமைத்துள்ளனர்.
 
4 ஆயிரம் டன் கரியமில வாயு வெளியேற்றம் குறையும்
 
இந்த மிதக்கும் சூரிய சக்திப் பண்ணையின் செயல்பாட்டுக்காக நாற்பது மாறு திசை மின்னோட்ட சாதனங்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிதவைகளும்  பயன்படுத்தப்பட்டுள்ளன.
 
ஆண்டு தோறும் சுமார் ஆறு மில்லியன் கிலோவாட் மணிநேர எரிசக்தியை இந்தப் பண்ணை மூலம் உற்பத்தி செய்ய முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
அதைவிட குறிப்பாக நான்காயிரம் டன் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கு இப்புதிய ஏற்பாடு உதவும் என்பதைதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்டு வரவேற்கிறார்கள்.
 
சிங்கப்பூரில் நிலப்பற்றாக்குறை என்பது தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இத்தகைய மாற்று எரிசக்தி உற்பத்தி திட்டங்கள் வருங்காலத்தில் அதிக எண்ணிக்கையில் செயல்படுத்தப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
 
கடல் நீர்ப்பரப்பின் மேலே அமைக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் சூரிய சக்திப் பண்ணையில் ஏராளமான மின் பேனல்களும், 22 கிலோவாட் சக்தி கொண்ட  டிரான்ஃபார்மர்களும் உள்ளன. கடல் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த சூரிய சக்தி பண்ணை எத்தகைய பருவ நிலை மாற்றங்களையும் தாக்குப்பிடித்து நிற்கும் வகையிலும், முக்கிய செயல்பாட்டு இயந்திரங்கள் எல்லாம் கச்சிதமாக இயங்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
இந்தப் பண்ணையின் இரண்டாம் தளத்தில் குளிர்சாதன வசதியுள்ள பார்வையாளர்கள் மையமும், பண்ணையை பார்த்து ரசிப்பதற்கு ஏற்ப காட்சிக் கூடமும்  அமைக்கப்பட்டுள்ளன.
 
இந்த சூரிய சக்தி பண்ணையை அமைக்க ஓராண்டு காலம் ஆனதாக தெரிவித்துள்ளார் சன்சீப் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஃப்ரேன்க் புவான் (Frank  Phuan). இந்த நிறுவனம்தான் சிங்கப்பூரின் ஆகப்பெரிய இந்தச் சூரிய சக்தி பண்ணையை அமைத்துள்ளது.
 
கொரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளதாக ஃப்ரேன்க் புவான் குறிப்பிட்டுள்ளார்.
 
"கடலோரப் பகுதிகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் உள்ளிட்ட பகுதிகள் நமக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன. நிலப்பற்றாக்குறையும், அடர்த்தியான மக்கள்  தொகையும் கொண்டுள்ள நகரங்கள் இத்தகைய வாய்ப்புகள் மூலம் சூரிய சக்தியை உற்பத்தி செய்ய இயலும்.
 
"நிலப்பரப்பிலோ மிகப் பெரிய கட்டடத்தின் மேற்பரப்பிலோ செயல்படுத்தக் கூடிய திட்டங்களைக் காட்டிலும் இது சவாலான ஒன்றாக இருந்தது. ஏனெனில் பரந்து  விரிந்துள்ள கடலின் தன்மை கணிக்க முடியாத ஒன்று. கப்பல்கள் செல்லும் வழித்தடங்களை தவிர்ப்பது உள்ளிட்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்,"  என்று அவர் தெரிவித்தார்.
 
மேலும் பல சவால்கள் உள்ளன: விளக்கும் நிபுணர்கள்
 
சூரிய சக்தி பண்ணையை அமைப்பதில் எதிர்கொள்ள வேண்டிய இதர பல சவால்கள் குறித்து கடல்சார் நிபுணர்கள் விளக்கி உள்ளனர்.
 
அலைகள், கடல் நீரோட்டங்களின் போக்கு, நுண்ணுயிரிகள் சூரிய தகடுகளில் படிந்துவிடாமல் தடுத்தல் ஆகியவற்றை தொடர்ந்து கவனிக்க வேண்டும். மின்  அமைப்புகள், இயந்திரங்கள் அனைத்தும் சரியாக இயங்குவதும் உறுதி செய்யப்பட வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
 
2005ஆம் ஆண்டு முதல் கரியமில வாயு வெளியேற்றத்தை 36 விழுக்காடு அளவுக்கு குறைக்க சிங்கப்பூர் உறுதி பூண்டுள்ளது. 2030க்குள் இதை சாத்தியமாக்குவதற்கு  இத்தகைய சூரிய சக்தி உற்பத்தி திட்டங்கள் அந்நாட்டுக்கு வெகுவாக கைகொடுக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
இதற்கிடையே சூரிய சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வேறு திட்டங்களையும் சிங்கப்பூர் அரசு செயல்படுத்தி வருகிறது. அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் மொட்டை  மாடியில் சூரிய சக்தி தகடுகளைப் பொருத்தும் பணியை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மேற்கொண்டுள்ளது.
 
இதில் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் இணைந்துள்ளது. குத்தகை அடிப்படையில் இந்தப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
 
இந்த ஏற்பாட்டின் மூலம் கிடைக்கும் சூரிய சக்தியைக் கொண்டு பல ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் பகுதி பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருத்துக்கணிப்பினால் அசால்ட்டா இருக்க வேண்டாம்! – ஸ்டாலின் அறிவுறுத்தல்