Publish Date: Mon, 14 Sep 2020 (11:02 IST)
Updated Date: Mon, 14 Sep 2020 (11:06 IST)
குடியேற்ற தொழிலாளர்கள் பெருமளவில் வசிக்கும் நெருக்கமான குடியிருப்புகளில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சிங்கப்பூர் அரசு போராடி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
கட்டுமானம், கப்பல் உள்ளிட்ட துறைகளில் வேலை செய்யும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் இத்தகைய குடியிருப்புகளில் வசிக்கிறார்கள்.
சிங்கப்பூரில் உள்ளாகியுள்ள 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 பாதிப்புகளில் 95% பேர் குறைவான ஊதியம் பெறும் இந்த கூலித் தொழிலாளர்கள் ஆவர்.
தொழிலாளர்களை தங்க வைப்பதற்கான அனுமதி பெற்ற மற்றும் தீவிரமான கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ள இடங்களில்கூட கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலானதாக உள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
செல்வ செழிப்பு மிக்க நகரமான சிங்கப்பூரின் பொருளாதாரம் தீவிரமான சரிவைச் சந்தித்து வருவதால் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் சிங்கப்பூர் அதிகாரிகள் உள்ளனர்.
அதன் காரணமாக முடக்கநிலை தீவிரமாக அமல்படுத்தப்படாமல் கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.