Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘சிங்கிள் பெண்களாக’ இருப்பதில் பெருமை கொள்ளும் இந்திய பெண்கள் கட்டுரை தகவல்

womens day
, வெள்ளி, 9 டிசம்பர் 2022 (23:13 IST)
சிறந்த மனைவி மற்றும் தாய்மார்களாக இருக்கும் விதத்திலேயே இந்தியப் பெண்கள் பாரம்பர்ய முறைப்படி வளர்க்கப்படுகின்றனர். திருமணம் என்பது மட்டுமே அவர்களுக்கான மிக முக்கிய வாழ்நாள் இலக்காக கருதப்படுகிறது. 
 
ஆனால், இப்போது அதிகளவிலான பெண்கள் சுதந்திரமான தனிமையான பாதையை வகுத்து சிங்கிளாக (Single) இருக்க விரும்புகின்றனர். 
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை தெற்கு டெல்லியில் உள்ள கரீபியன் லவுஞ்சில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மதிய உணவு கூடுகையில் கலந்துகொண்டேன். அரட்டைகளும் சிரிப்பு சத்தத்தாலும் அந்த அறை நிரம்பியிருந்தது. 
 
அப்பென்கள் அனைவரும் ‘ஸ்டேட்டஸ் சிங்கிள்’ (Status Single) என்கிற முகநூல் குழுவைச் சேர்ந்தவர்கள். இக்குழுவில் உள்ளவர்கள், இந்திய நகரங்களைச் சேர்ந்த சிங்கிள் பெண்களாவர். 
 
“விதவைகள், விவாகரத்தானவர்கள் அல்லது திருமணமாகாதவர்கள் என நம்மை மற்றவர்கள் அழைப்பதை நிறுத்துவோம்,” என, எழுத்தாளரும் அக்குழுவை உருவாக்கியவருமான ஸ்ரீமோயி பியூ குண்டு அக்குழுவை நோக்கி கூறினார். “நம்மை சிங்கிள் பெண்கள் என பெருமையாக அழைப்போம்.” என்கிறார் அவர். 
 
அப்போது, அங்கு குழுமியிருந்த பெண்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். 
 
இந்தோனீசியாவின் பாலியல் உறவு தொடர்பான புதிய சட்டத்தை கண்டு சுற்றுலா பயணிகள் அஞ்சுவது ஏன்?
 
“திருமணம் குறித்தே எப்போதும் சிந்திக்கப்படும்” ஒரு நாட்டில் சிங்கிளாக இருப்பது குறித்து பல தவறான கற்பிதங்கள் நிலவுகின்றன. 
 
இந்திய கிராமங்களில் சிங்கிளாக இருக்கும் பெண்கள் அவர்களின் குடும்பத்தினரால் சுமைகளாக கருதப்படுகின்றனர். கணவனை இழந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பிருந்தாவனம் மற்றும் வாரணாசி போன்ற புனித நகரங்களுக்கு விரட்டப்பட்டுள்ளனர். 
 
ஸ்ரீமோயி பியூ குண்டுவும் டெல்லி ‘பப்’பில் நான் சந்தித்த பெண்களும் வித்தியாசமானவர்கள். பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், தொழில்முனைவோர், செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். அவர்களுள் சிலர் திருமணமாகி பிரிந்தவர்கள், விவாகரத்தானவர்கள் அல்லது கணவரை இழந்தவர்கள். மற்றவர்கள் திருமணமே செய்து கொள்ளாதவர்கள். 
 
 
நகர்ப்புறங்களைச் சேர்ந்த பணக்கார சிங்கிள் பெண்கள், வங்கிகள், நகை வடிவமைப்பாளர்கள், நுகர்வு நிறுவனங்கள் மற்றும் டிராவல் ஏஜென்சிகளால் ஈர்க்கப்படுகின்றனர்.

 
மேலும், பிரபலமான கலாசார கூறுகளிலும் சிங்கிள் பெண்கள் பிரதிநிதித்துவம் பெறுகின்றனர். சிங்கிள் பெண்கள் முதன்மை கதாபாத்திரமாக தோன்றிய குயின், பிகு போன்ற பாலிவுட் திரைப்படங்களும், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் (Four More Shots Please) உள்ளிட்ட வெப் சீரீஸ்களும் வணிக ரீதியாக வெற்றியடைந்துள்ளன.  

 
திருமணமாகாத பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்வதற்கு சம உரிமை இருக்கிறது என, உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு, சிங்கிளாக இருக்கும் பெண்களின் உரிமைகளை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கும் வகையில் இருப்பதாக பாராட்டப்பட்டது. 
 
இத்தகைய வரவேற்கத்தக்க மாற்றங்கள் இருந்தாலும் சிங்கிளாக இருப்பவர்களை சமூகம் அணுகுவது இன்னும் இறுக்கமாகவே இருக்கிறது. மேலும், ஸ்ரீமோயி சொல்பது போல வசதி படைத்த பெண்களுக்கும் சிங்கிளாக இருப்பது எளிதாக இருப்பதில்லை, மேலும் அவர்கள் எந்நேரமும் மற்றவர்களால் மதிப்பிடப்படுகின்றனர். 

 
“ஓர் சிங்கிள் பெண்ணாக நான் பாகுபாட்டையும் அவமரியாதையையும் சந்தித்துள்ளேன். மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் நான் வாடகை வீட்டை தேடிய போது, அங்கிருந்த ஹவுசிங் சொசைட்டியை சேர்ந்தவர்கள் நீங்கள் மது அருந்துவீர்களா, பாலியல் உறவில் ஈடுபாடு கொண்டவரா? ஆகிய கேள்விகளை கேட்டனர்,” என்கிறார், ஸ்ரீமோயி. 

 
“மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் அண்டை வீட்டார் போல” நடந்துகொண்ட மகப்பேறு மருத்துவர்களை ஸ்ரீமோயி சந்தித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய சார்பாக அவரின் தாய் திருமண மேட்ரிமோனியல் இணையதளத்தில் விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார். இதன்மூலமாக தான் சந்தித்த நபர் ஒருவர் தன்னை சந்தித்த 15 நிமிடங்களிலேயே “நான் கன்னித்தன்மையுடன் உள்ளேனா?” என கேட்டதாக கூறுகிறார் அவர். 

 
“சிங்கிளாக இருக்கும் பெண்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் கேள்வி இது,” என்கிறார் அவர். 
 
திருமணத்தை வெறுக்கும் பெண்கள்

 
ஆனால், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 7.1 கோடி பெண்கள் சிங்கிளாக இருக்கும் ஒரு நாட்டில் அவர்களை அவமதிப்பது பொருத்தமாக இல்லை. இந்த 7.1 கோடி என்பது பிரிட்டன் அல்லது பிரான்ஸின் ஒட்டுமொத்த மக்கள்தொகையை விட அதிகம். 

 
இந்த எண்ணிக்கை கடந்த 2001ல் 5.12 கோடியாக இருந்ததிலிருந்து தற்போது 39 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு கோவிட் பெருந்தொற்றால் தாமதமாகியுள்ளது. ஆனால், “இப்போது வரை, “எங்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்திருக்கும்” என்கிறார் ஸ்ரீமோயி. 

 
இந்தியாவில் திருமண வயது அதிகரித்திருப்பது இந்த எண்ணிக்கை அதிகமானதற்கு ஓர் காரணம். அதாவது, சிங்கிளாக இருக்கும் பெரும்பாலான பெண்கள் தற்போது பதின்பருவத்தின் இறுதியிலோ அல்லது 20களின் தொடக்கத்திலோ இருப்பார்கள். மேலும், கணவரை இழந்த பெரும்பாலான பெண்களும் இதில் அடங்குவர். ஆண்களை விட பெண்கள் அதிகமான வாழ்நாளை கொண்டிருப்பதை இதற்கு காரணமாக சொல்லலாம். 

 
ஆனால், “தற்போது சூழ்நிலைகளால் மட்டுமல்லாமல் தாங்களாகவே விரும்பி பல பெண்கள் சிங்கிளாக இருப்பதை” தான் காண்பதாக ஸ்ரீமோயி கூறுகிறார். 

 
“இதுதான் சிங்கிளாக இருப்பதில் நிகழ்ந்துள்ள தற்போதைய மாற்றம்” என்றும் அதனை அங்கீகரிப்பது முக்கியம் என்றும் அவர் கூறுகிறார்.

 
“தாங்களாகவே விரும்பி சிங்கிளாக இருக்கும் பல பெண்களை நான் பார்க்கிறேன். அவர்கள் திருமணம் எனும் கருத்தியலையே புறக்கணிக்கின்றனர். ஏனெனில் திருமணம் என்பது பெண்களுக்கு அநீதி இழைக்கும் அவர்களை ஒடுக்கும் ஆணாதிக்க நிறுவனம்” என்றார். 

 
சிங்கிளாக இருப்பதென்பதை, 29 வயதில் கணவரை இழந்த தன்னுடைய தாய் சந்தித்த பாகுபாட்டின் வாயிலாகவே அவர் அணுகுகிறார். 
 
“ஆண் துணை இல்லாத ஒரு பெண் எவ்வாறு இந்த ஆணாதிக்க, பெண் வெறுப்பு அமைப்பில் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை பார்த்தே நான் வளர்ந்தேன். வளைகாப்பு, உறவினரின் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் என் அம்மா புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

 
மணப்பெண்ணிடம் இருந்து விலகி நிற்குமாறு அவரிடம் கூறியுள்ளனர். ஏனெனில், கணவரை இழந்த பெண்ணின் நிழல் அபசகுணமாக கருதப்படுகிறது.” என்கிறார் ஸ்ரீமோயி. 

 
44வது வயதில் அவருடைய தாய் காதலித்து மறுதிருமணம் செய்துகொண்டபோதும் “அவர் சமூகத்தின் கோபத்திற்கு ஆளானார்” - “வருத்தம், அழுகை, பாலியல் இன்பம் அற்ற, ஆசைகளற்ற - இவை அனைத்தும் இல்லாத பெண்ணாக ஓர் விதவைப் பெண் எப்படி இருக்க முடியும்? எப்படி அவர் மீண்டும் ஒரு துணையை ஏற்றுக்கொள்ள முடியும்?” என கேட்டனர். 

 
"நேர்மறையான மாற்றம்"

 
தன் தாய் சந்தித்த அவமானங்கள், தன் மீது பெரும் தாக்கத்தை செலுத்தியதாக அவர் கூறுகிறார். 

 
“திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற மிகுந்த ஆசையுடன் நான் வளர்ந்தேன். கதைகளில் வரக்கூடியது போன்ற திருமணம் ஏற்றுக்கொள்ளுதலை வழங்கும் என்றும் இருட்டை விலக்கும் என்றும் நம்பினேன்,” என்கிறார் அவர். 

 
ஆனால், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாக இருந்த இரண்டு தோல்வியுற்ற உறவு மற்றும் 27 வயதில் முடிவடைந்த திருமண உறவு ஆகியவற்றால், ஆண்களுக்கு அடிபணியக்கூடிய வழக்கமான திருமண முறை தனக்கானது அல்ல என்பதை அவர் உணர்ந்தார். 
 
கலாசாரம், மதம் அல்லது சமூகம் ஆகியவற்றால் அல்லாமல், “மரியாதை, அங்கீகாரம்” ஆகியவற்றால் வருவதே தனக்கு பொருத்தமான உறவு முறை என்கிறார் அவர். 
 
ஞாயிற்றுக்கிழமை நான் சந்தித்த பெரும்பாலான சிங்கிள் பெண்கள் இதனை ஒப்புக்கொண்டனர்.
 
 
ஆணாதிக்க சமூகமாக நீடிக்கும் இந்தியாவில் 90 சதவீத திருமணங்கள் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த திருமணங்களில் தான் யாரை திருமணம் செய்கிறோம் என்றோ அல்லது தங்களுக்கு திருமணம் செய்வதில் விருப்பம் இருக்கிறதா என்றோ பெண்களிடம் கேட்கப்படுவதில்லை. 

 
டெல்லிக்கு அருகே உள்ள குர்கோவனை சேர்ந்த 44 வயதான வாழ்வியல் பயிற்சியாளராக உள்ள பாவனா தாஹியா, இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. பலவிஷயங்கள் மாறி வருவதாகவும் சிங்கிளாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கொண்டாட்டத்திற்கான ஓர் காரணம் என்றும் கூறுகிறார் அவர். 

 
“நாங்கள்  கடலின் சிறுதுளியாக இருக்கலாம், ஆனால், இப்போது சிறுதுளியாவது இருக்கிறது,” என்கிறார் அவர். 

 
“சிங்கிள் பெண்களாக இருப்பதற்கான உதாரணங்கள் அதிகமாக உள்ளன, அவை சிறந்ததாக உள்ளன. வழக்கமாக, கணவரின் வேலை, அவருடைய திட்டங்கள், குழந்தைகளின் பள்ளி உள்ளிட்டவை குறித்தே உரையாடல்கள் இருக்கும். பெண்களின் விருப்பங்கள் மீது கவனம் செலுத்தப்படவில்லை. ஆனால், இப்போது இந்த உரையாடல்கள் மாறிவருகின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணி மீது மின்சாரம் தாக்கி பலி!