Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனாவில் இந்திய வகை கொரோனா திரிபு: எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதார அதிகாரிகள்

சீனாவில் இந்திய வகை கொரோனா திரிபு: எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதார அதிகாரிகள்
, ஞாயிறு, 2 மே 2021 (00:24 IST)
சீனாவிற்குள் வரும் பயணிகளில் இந்திய கொரோனா வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளதால் ஆபத்துகள் அதிகரிக்கலாம் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
ஐந்து நாள் தொழிலாளர் தின விடுமுறை வாரத்திற்கு முன்னதாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
பொது சுகாதார அவசரநிலைகளை சமாளிக்க அதிக அதிகாரங்களைக் கொண்ட ஒரு புதிய நோய் கட்டுப்பாட்டு பணியகத்தையும் சீனா உருவாக்கியுள்ளது.
 
இந்திய திரிபுக்கு எதிரான எச்சரிக்கை
 
அண்டை நாடான இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் -19 திரிபு, பி 1617, சீனாவில் உள்வரும் சில பயணிகளிடம் 14 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு கண்டறியப்பட்டதை அடுத்து, நாடு மிகுந்த உஷார் நிலையில் இருப்பதாக சீன சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். சமீபத்திய வாரங்களில் இந்தியாவில் பி 1617 திரிபுதான், மாபெரும் இரண்டாவது அலை நோய்த்தொற்றைத் தூண்டியதா என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
 
ஏப்ரல் 29 அன்று பீய்ஜிங்கில், அரசு சபையின் கூட்டு நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறையால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது, சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (சி.டி.சி) தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வு ஜுன்யோ இதை உறுதி செய்ததாக, தனிப்பட்ட முறையில் இயங்கும் சீன செய்தி வலைத்தளமான Guancha.cn (Observer) செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், B1617 திரிபு காரணமாக வெளியிலிருந்து எத்தனை தொற்றுகள் வந்தன என்பதை அவர் குறிப்பிடவில்லை.
 
சில சீன நகரங்களில் இந்திய திரிபுபைக்கண்டறிவது ஒரு "கவலைக்குரிய பிரச்னை" என்று அவர் கூறினார். ஆனால் அந்த திரிபு எங்கே கண்டுபிடிக்கப்பட்டது என்பதை அவர் குறிப்பிடவில்லை.
 
இந்தியாவிலும் பிற இடங்களிலும் ஏற்பட்டுள்ள கோவிட் -19 நெருக்கடி, இந்த தொற்றுநோயைத் தடுப்பதும், கட்டுக்குள் கொண்டுவருவதும் வெகு தொலைவில் உள்ளது என்ற எச்சரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளது என்றும் பெருந்தொற்று விரைவில் தீரும் அறிகுறி இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
 
ஏப்ரல் மாதத்தில் நாட்டிற்குள் வந்த 364 பயணிகளுக்கு கோவிட் -19 தொற்று உறுதிசெய்யப்பட்டது என்றும் இது முந்தைய மாதத்தை விட சராசரியாக தினசரி 20 சதவீதத்திற்கும் அதிகமாகும் என்றும் நாட்டின் உயர்மட்ட சுகாதார அமைப்பான தேசிய சுகாதார ஆணையத்தின் (என்.எச்.சி) செய்தித் தொடர்பாளர் மி ஃபெங், செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்ததாக சீனா மத்திய தொலைக்காட்சி (சிசிடிவி) தெரிவித்துள்ளது.
 
ஏப்ரல் 28 ஆம் தேதி, தென்மேற்கு நகராட்சியான சோங்கிங்கில் உள்ள சுகாதார அதிகாரிகள் இந்தியாவில் இருந்து வந்த நான்கு பேருக்கும், நேபாளத்திலிருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டதாகத் தெரிவித்தனர். ஆனால் புதிய தொற்றுகள் B1617 திரிபு காரணமாக ஏற்பட்டதா என்பதை குறிப்பிடவில்லை என்று ஆங்கில மொழி ஹாங்காங் செய்தித்தாள், சவுத் சைனா மார்னிங் போஸ்ட், ஏப்ரல் 30 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஹாங்காங்கில் பதிவுசெய்யப்பட்ட சரக்குக் கப்பலான ஹுவாங் சன்ரைஸில் 11 மாலுமிகளுக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, ஏப்ரல் 29 ம் தேதி, கிழக்கு ஜெஜியாங் மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக்கப்பல் முன்னதாக இந்தியா, வங்கதேசம் மற்றும் சிங்கப்பூருக்கும் சென்றிருந்தது என்று சி.சி.டி.வி தெரிவித்துள்ளது.
 
கோவிட் -19 விடுமுறை முன்னெச்சரிக்கைகள்
நாட்டிற்கு வெளியிலிருந்து வந்துள்ள தொற்றுகள் குறித்த எச்சரிக்கை, சீனாவின் ஐந்து நாள் மே தின அதாவது தொழிலாளர் தின கோல்டன் வீக் விடுமுறை நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. .
 
சர்வதேச பயணங்களுக்கு அனுமதி இல்லையென்றாலும் கூட, விடுமுறை நாட்களில் சுமார் 265 மில்லியன் உள்நாட்டு பயணிகள் பயணிப்பார்கள் என்றும் தினசரி 54 மில்லியன் பயணங்கள் இருக்கும் என்றும் போக்குவரத்து அமைச்சகம் கணித்துள்ளது. 2019 மே தின விடுமுறை நாட்களில் ஏறக்குறைய இதே எண்ணிக்கை இருந்தது.
 
விடுமுறை நாட்களில் பெரிய கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கும் பங்கேற்பதற்கும் எதிராக செய்தியாளர் சந்திப்பில் வு ஜுன்யோ எச்சரிக்கை விடுத்தார்.
 
இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியர்கள் திரும்பி வருவது குற்றம், வந்தால் 5 ஆண்டு சிறை
கொரோனா இரண்டாம் அலை: “எந்த நேரத்திலும் இந்தியாவுக்கு உதவ தயார்” – உதவிகரம் நீட்டும் சீனா
பொது இடங்களில் காற்றோட்டம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், தொற்றுநோய் தடுப்பிற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் என்.எச்.சியின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணியகத்தைச் சேர்ந்த வாங் பின், செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். .
 
கலப்பு கோவிட் -19 தடுப்பூசிகள்
தடுப்பூசி பெறுநர்கள் வெவ்வேறு உற்பத்தியாளர்களால் ஒரே நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கோவிட் -19 தடுப்பூசிகளை,"சிறப்பு சூழ்நிலையில்" கலந்து பயன்படுத்தலாம் என்று வாங் பின் , செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்ததாக அரசு நடத்தும் பெய்ஜிங் டெய்லி செய்தித்தாளின் வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது. முதல் டோஸின் 3-8 வாரங்களுக்குள் இரண்டாவது ஊசி போட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று வாங் கூறினார்.
 
சில இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதான அறிக்கைகளுக்கு மத்தியில், தடுப்பூசி சப்ளை அதிகரிக்கப்படும் என்றும் இரண்டாவது ஊசிக்காக காத்திருக்கும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் வாங் உறுதியளித்தார்.
 
ஃபைசர்-பயோஎன்டெக், தடுப்பூசி செயல்திறனை அதிகரிப்பதற்காக , சீனாவின் செயலிழக்க செய்யப்பட்ட அதாவது அடினோவைரஸ் வெக்டர் தடுப்பூசியுடன் பயோஎன்டெக் எம்ஆர்என்ஏ தடுப்பூசியை கலந்து பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி நடத்தி வருவதாக, அரசு நடத்தும் ஆங்கில செய்தித்தாள் குளோபல் டைம்ஸின் ஏப்ரல் 29 கட்டுரை தெரிவிக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் இருந்து அமெரிக்கா வரத் தடை...