Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா தடுப்பூசி 18+ திட்டம்: நரேந்திர மோதி அரசின் முயற்சி வெல்லுமா தோற்குமா?

கொரோனா தடுப்பூசி 18+ திட்டம்: நரேந்திர மோதி அரசின் முயற்சி வெல்லுமா தோற்குமா?
, சனி, 1 மே 2021 (11:25 IST)
தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ள கோவின் செயலி மூலம் 2.45 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால், தொடக்கத்திலேயே அந்த திட்டம் தள்ளிப்போவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. என்ன காரணம்?
 
கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளைக் கொண்டு ஏற்கெனவே இரண்டு கட்ட தடுப்பூசித் திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறது இந்திய அரசு. மூன்றாவதாக இந்திய அரசு அனுமதித்துள்ள ரஷ்யாவின் ஸ்புட்னிக் V எப்போது இந்தியாவில் புழக்கத்துக்கு வரும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
 
வெள்ளிக்கிழமை மூன்றாம் கட்டமாக 18 வயது முதல் 44 வயதுடையவர்கள் தடுப்பூசி போட்
டுக் கொள்ளலாம் என இந்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதற்காக கோவின் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியது.
 
ஆனால், தடுப்பூசியை பெற கோவிஷீல்டு தயாரிப்பாளரான சீரம் நிறுவனம், கோவேக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோஎன்டெக் ஆகியவை விலை நிர்ணயம் செய்தன. அவை மத்திய அரசுக்கு சலுகை விலையிலும் மாநிலங்களுக்கு ஒரு விலையையும் நிர்ணயித்தன.
 
இதேவேளை, 18 வயது அடைந்தவர்களையும் சேர்த்து அனைவருக்கும் தடுப்பூசி டோஸ்களை வழங்க வேண்டுமானால், அதற்கு மாநிலங்கள் அந்த தடுப்பூசிகளை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். அதற்கு பல மாநிலங்கள் தயாராகாத நிலையில், மூன்றாம் கட்ட தடுப்பூசி திட்டம், அதன் தொடக்க நாளான மே 1ஆம் தேதி எந்த அளவுக்கு செயல்படத் தொடங்கும் என்று தெரியவில்லை.
 
இது குறித்து பல்வேறு மாநில அரசுகளும் என்ன கூறியுள்ளன என்பதை பார்க்கலாம்.
 
தமிழ்நாடு
மே 1 முதல் அனைவருக்கும் இலவச கோவிட் -19 தடுப்பூசி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், மாநில சுகாதாரத்துறை செயலாளரான ஜே. ராதாகிருஷ்ணன், "1.5 கோடி தடுப்பூசிகளுக்கு ஏற்கெனவே அரசு ஆர்டர் செய்திருந்தாலும் அது எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டார். எனவே போதிய தடுப்பூசி கைவசம் இல்லாததால், 18 - 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் மே 1ஆம் தேதி அமலாவது சந்தேகமே" என்று தெரிவித்திருந்தார்.
 
ஆந்திர பிரதேசம்
 
இந்த மாநிலமும் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
 
இந்த விவகாரத்தில் அமைதி காத்து வந்த மாநில முதல்வர், 18 முதல் 45 வயதுடையவர்களுக்கான தடுப்பூசி போடும் திட்டம், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போட்டு முடித்த பின்னர், செப்டம்பர் மாதத்தில் மட்டுமே தொடங்கும் என்று கூறினார்.
 
"18 முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்க நான்கு மாதங்கள் ஆகும். மூன்றாம் கட்ட திட்டம், அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் நிறைவேற்றப்படும்" என்று முதல்வர் கூறியுள்ளார்.
 
தெலங்கானா
கோவிட் -19 தடுப்பூசியை மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் வயது வித்தியாசமின்றி இலவசமாக வழங்குவதாக தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கடந்த வாரம் அறிவித்தார்.
 
ஆனால், மே 1ஆம் தேதி 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கான தடுப்பூசி போடுவதற்கான சாத்தியம் இல்லை என்று தெலங்கானா பொது சுகாதார இயக்குநர் ஜி.சீனிவாச ராவ் கூறியுள்ளார்.
 
அம்மாநிலத்தில் தடுப்பூசி கொள்முதல் நடவடிக்கையில் அரசுத்துறை ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
கேரளா
 
கேரள அரசு அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குவதாக அறிவித்திருந்தது.
 
அதன்படி மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தடுப்பூசி திட்டம் "தடையின்றி" செயல்படும் என்றும், தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளில் 1 கோடி டோஸ் - கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசி மருந்தை அரசு வாங்கும் என்றும் கூறியுள்ளார்.
 
முதல் டோஸ் போடுவதற்காக 70 லட்சம் டோஸ் மருந்தை திறந்த சந்தையில் அரசு வாங்கும் என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
 
மத்திய பிரதேசம்
மே 1 முதல் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்திருந்தது.
 
ஆனால், வியாழக்கிழமை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில், "மே 1ஆம் தேதி 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தொடங்க மாட்டோம் என்று கூறினார்.
 
கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் பேசியபோது, மே 1 அன்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேவையான டோஸ்களை வழங்க முடியாது என்று கூறியதையடுத்து அந்த திட்டம் மே 1 ஆம் தொடங்கப்படாது என்று கூறியிருக்கிறார் சிவராஜ் சிங் செளஹான்.
 
ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​கடந்த வார இறுதியில் வெளியிட்ட அறிக்கையில், "18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார்.
 
ஆனால், தடுப்பூசிக்கான ஆர்டர்களை கொடுத்த பிறகும் அவை விநியோகம் செய்யப்படாததால் 18 வயதுடையவர்களுக்கான தடுப்பூசி போட குறைந்தது 20 நாட்களாவது ஆகும் என்று அங்குள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஏற்கெனவே, ஜம்மு காஷ்மீரில் அமலில் உள்ள முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட தடுப்பூசி திட்டங்களில் பயனர்கள் முன்பதிவு செய்த பிறகும் அவர்களுக்கு பல இடங்களில் தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடாத நிலை நிலவுகிறது.
 
இமாச்சல பிரதேசம்
இந்த மாநிலம், கோவிட் -19 தடுப்பூசியை மே 1 முதல் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்தது.
 
ஆனால், கடந்த வியாழக்கிழமை பேசிய முதல்வர் முதல்வர், "தேவையான தடுப்பூசி கிடைத்தால் மட்டுமே 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று கூறினார்.
 
சத்தீஸ்கர்
 
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மாநில அரசு பணம் செலுத்தும் என்று மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்திருந்தார். ஆனால், மே 1 முதல் 18 வயதுக்கும் மேற்பட்ட குடிமக்களுக்கு தடுப்பூசி போட எங்களிடம் போதுமான தடுப்பூசி மருந்து இல்லை என்று கூறியிருக்கிறார் சத்தீஸ்கர் மாநில சுகாதார அமைச்சர் டி.எஸ். சிங் தேவ்.
 
பிகார்
பிகார் மாநிலத்திலும் 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு இலவசமாக கோவிட் தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
 
ஆனால் பிகார் மாநில சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் மனோஜ் குமார், பிகார் அரசு கோரிய தடுப்பூசியின் ஒரு கோடி டோஸ்களை வழங்க சீரம் இந்தியா நிறுவனம் மறுத்து விட்டது.
 
அதற்கு பதிலாக, தனது மாதாந்திர தேவையை அரசு தெரிவிக்குமாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது என்று தெரிவித்தார். இதன்படி, மாநில முதல்வர் விரும்பினாலும், சீரம் இந்தியா நிறுவனம் விநியோகம் செய்யாததால் இங்கும் தடுப்பூசி திட்டம் 18-44 வயதுடையவர்களுக்கு அமலாகுமா என்பது கேள்விக்குறியே.
 
ஜார்கண்ட்
இந்த மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன், கொரோனா தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். ஆனால், தற்போதைய நிலவரப்படி 18-44 வயதுக்குட்பட்டவர்களை உள்ளடக்கிய தடுப்பூசி திட்டம், மே 15ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கும் என்று கூறியுள்ளார்.
 
ஆனால், ஜார்க்கண்ட் மாநிலம் கோரிய ஆர்டர்களை மே கடைசி வாரத்திலேயே வழங்க முடியும் என்று தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் கூறியுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் பன்னா குப்தா தெரிவித்துள்ளார்.
 
உத்தர பிரதேசம்
 
நாட்டின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட இந்த மாநிலத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.
 
23 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்த மாநிலத்தில் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தயாரிப்பாளர்களிடமிருந்து தலா 50 லட்சம் தடுப்பூசிகளுக்கு அரசாங்கம் ஏற்கனவே ஆர்டர் செய்துள்ளது. ஆனால், இது நாள்வரை அதன் தேவை பூர்த்தியாகவில்லை. எனவே, சர்தேச அளவில் நான்கு கோடி டோஸ் தடுப்பூசி பெறுவதற்காக ஒப்பந்தப்புள்ளிகளை உத்தர பிரதேச அரசு வரவேற்றுள்ளது.
 
அமலில் உள்ள இரண்டு கட்ட கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கே கையிருப்பு பற்றாக்குறை உள்ளதால், மூன்றாம் கட்ட திட்டத்துக்கான தடுப்பூசி திட்டம் அமலாகுமா என்பது சந்தேகமே.
 
அசாம்
அசாம் மாநிலமும் கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாக வழங்குவதாக கூறியுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 10 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்துகளுக்கு ஏற்கனவே இந்த மாநில அரசு ஆர்டர் செய்துள்ளது.
 
ஆனால், 18-45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் மூன்றாம் கட்ட திட்டம் மே 1ஆம் தேதி செயல்படுவது சந்தேகமே என்று கூறியிருக்கிறார், மாநில சுகாதார அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா.
 
சிக்கிம்
சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் புதன்கிழமை 18-45 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி போடும் செலவை மாநில அரசே ஏற்கும் என்று அறிவித்திருந்தார். ஆனால், சிக்கிம் சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர், கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கான செயல்முறை இன்னும் நடைபெற்று வருவதால் மே 1ஆம் தேதி திட்டம் தொடங்குவது சாத்தியமில்லை என்று கூறியிருக்கிறார்.
 
மேற்கு வங்கம்
 
18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை மே 1ஆம் தேதிக்கு பதிலாக மே 5ஆம் தேதி செயல்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. அந்த மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவு மே 2ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
 
இதை கருத்தில் கொண்டே மூன்றாம் கட்ட திட்டத்தை மேற்கு வங்க அரசு தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த மாநிலத்திலும், 18-44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போட கையிருப்பில் தடுப்பூசி உள்ளதா என்பது கேள்விக்குறியே.
 
ஹரியாணா
ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஹரியாணாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று கூறியுள்ளார். ஆனால், சமீபத்தில் பேசிய அம்மாநில தேசிய சுகாதார திட்ட இயக்குநர் பிரப்ஜோத் சிங், "ஹரியாணாவில் கோவிட் தடுப்பூசி கையிருப்புக்கு பற்றாக்குறை உள்ளது. வரும் நாட்களில் நிலைமை மேம்படும் என்று நம்புகிறோம். மே 1ஆம் தேதி 18-44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான தடுப்பூசி ஆர்டர்களை ஏற்கெனவே செய்து விட்டோம் என்று கூறியுள்ளார். ஆனால், அந்த திட்டம் மே 1ஆம் தேதி செயல்படுத்தப்படுமா என்பதை அம்மாநில அரசு கடைசிவரை தெளிவுபடுத்தவில்லை.
 
கோவா
இந்த மாநிலமும் 18 முதல் 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதை இலவசமாக அறிவித்துள்ளது. தொடக்கத்தில் ஐந்து லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி வாங்குவோம் என்று கோவா அரசு கூறியது. ஆனால், அந்த டோஸ் மருந்துகளுக்கான ஆர்டர்களை செய்துள்ளதால் சீரம் நிறுவனம் வழங்கியபிறகே 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அரசு கூறியிருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசி எங்கடா டேய்? – தடுப்பூசி வழங்காதது குறித்து சித்தார்த் ட்வீட்!