Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இம்ரான்கான் உரை: "இந்திய விவகாரத்தில் இது போல ஒரு அந்நிய சக்தி தலையிட முடியாது"!

இம்ரான்கான் உரை:
, சனி, 9 ஏப்ரல் 2022 (08:01 IST)
தன் ஆட்சியைக் கவிழ்க்க நடந்த முயற்சிகளை அந்நிய சதி என்று கூறி வந்த இம்ரான்கான் "இந்தியாவின் விவகாரத்தில் இது போல ஒரு அந்நிய சக்தி தலையிட முடியாது" என்று கூறினார்.
 
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைக்க இம்ரான்கான் பரிந்துரைத்தது செல்லாது என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
இந்தநிலையில் இம்ரான்கான் வெள்ளிக்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
 
அவர் உரையில் என்ன சொன்னார்?
நாட்டு மக்களுக்கு இம்ரான் ஆற்றிய உரை:
 
26 ஆண்டுகளுக்கு முன்பு நான் தொடங்கிய கட்சி தெஹ்ரீக்-இ-இன்சாஃப். அன்றிலிருந்து இன்று வரை எனது கொள்கைகள் மாறவில்லை. எனது கட்சிக்கு இன்சாஃப் என்று பெயரிட்டேன். நான் நேர்மை, நீதி மற்றும் பொது நலம் ஆகிய கொள்கைகளின்படி நடந்துள்ளேன். இன்று நான் நேர்மை மற்றும் நீதி பற்றி பேச விரும்புகிறேன்.
 
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் நான் ஏமாற்றமடைந்துள்ளேன், ஆனால் நான் பாகிஸ்தான் நீதிமன்றங்களையும் உச்ச நீதிமன்றத்தையும் மதிக்கிறேன்.
 
இன்று வரை ஒருமுறை சிறை சென்றிருக்கிறேன். எந்தவொரு சமூகத்தின் அடித்தளமும் நீதியின் மீது உள்ளது என்பதும் அந்த நீதியின் பாதுகாவலர் நீதிமன்றமே என்பதும் எனது நம்பிக்கை. இதை சொல்வதற்கு வருந்துகிறேன். நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் அதற்காக வருந்துகிறேன்.
 
துணை சபாநாயகர் 5வது பிரிவின் கீழ் தேசிய சட்டமன்றத்தை கலைத்தார். அரசாங்கத்தைக் கவிழ்க்க அந்நிய நாடு ஒன்று சதி செய்கிறது என்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டு இது. இது மிகக் கடுமையான குற்றச்சாட்டு, குறைந்தபட்சம் உச்ச நீதிமன்றமாவது இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் உச்ச நீதிமன்றத்தையாவது அழைத்து அந்த ஆவணத்தைப் பார்த்திருக்க வேண்டும்.
 
அரசியல்வாதிகளின் மனசாட்சி வெளிப்படையாக விலைக்கு வாங்கப்படுகிறது. செம்மறி ஆடுகளை போல், ஓட்டல்களில் அடைத்து வைக்கப்படுகின்றனர். இது சமூக ஊடகங்களின் காலம். எந்த விலைக்கு விற்கப்படுகிறது என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும். உலகின் எந்த ஜனநாயகத்தில் இது நடக்கிறது?
 
அரசியல்வாதிகளின் இந்த வாங்குதல் மற்றும் விற்பனையை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்த்தோம். இது என்ன ஜனநாயகம், இதில் அரசியல்வாதிகள் வெளிப்படையாக விற்கப்படுகிறார்கள்.
 
இந்த ஷெரீப் சகோதரர்கள் எல்லாம் அரசியல்வாதிகளை செம்மறி ஆடுகளைப் போல விலைக்கு வாங்க ஆரம்பித்து விட்டார்கள். மக்களுக்கு சேவை செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்து வரும் தலைவர்கள் விற்கப்படுகிறார்கள்.
 
நான் பாகிஸ்தானியனாக பேசுகிறேன். நமது பாகிஸ்தான் ஒரு சிறந்த நாடாக மாறும் என்று எனக்கு ஒரு கனவு இருந்தது. என்னுடைய இந்தக் கனவு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
 
நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டோம், ஆனால் பாகிஸ்தானில் இது வெளிப்படையாக நடப்பதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. எல்லோரும் பார்க்கிறார்கள்.
 
எந்த மேற்கத்திய நாட்டிலும் நான் பார்த்ததில்லை. அங்கு யாரும் யாரையும் வாங்க நினைக்க மாட்டார்கள், யாரும் விற்க மாட்டார்கள்.
 
தீமையை தடுத்து நிறுத்துவது சமுதாயத்தின் பொறுப்பு. தீமை தடுக்கப்படாவிட்டால், அது சமூகத்தில் பரவுகிறது. மேற்கத்திய நாடுகளின் மக்கள் நீதிக்காகவும் தீமைக்கு எதிராகவும் நிற்கும் விதம், நம் மக்களிடம் இல்லை.
 
பிரிட்டனில், ஈராக் போருக்கு எதிரான அணிவகுப்பில் பங்கேற்றேன். இந்த பேரணியில் இரண்டு மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். அந்த போரினால் பிரிட்டான் பலன் அடைந்தது, ஆனால் நாட்டு மக்கள் அதற்கு எதிராக நின்றனர். தங்கள் நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று எனது நாட்டு மக்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். தீமையிலிருந்து நம்மைக் காப்பாற்ற வெளியில் இருந்து யாரும் வர மாட்டார்கள், நாமே எழுந்து நிற்க வேண்டும்.
 
நாம் 22 கோடி மக்கள். அந்த அதிகாரி நம் நாட்டுக்கு உத்தரவு போடுவது நம்மை அவமதிக்கும் செயலாகும். உங்கள் பிரதமர் பதவி தப்பினால், அதன் விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்றும் அவர் தோற்றால் உங்களை மன்னிப்போம் என்றும் அவர் கூறுகிறார். பாகிஸ்தான் மக்களிடம் நான் கேட்க விரும்புகிறேன், நாம் இப்படியே இருக்க வேண்டும் என்றால், நாம் ஏன் நமது சுதந்திரத்தைக் கொண்டாடுகிறோம். வெளி நாடுகள் எமக்கு கட்டளையிடுகின்றன. நமது பிரதமரை நீக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
 
ஊடகங்களும் வெட்கப்படவில்லை. ஒரு கட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்னொரு கட்சிக்கு போவது அனைவருக்கும் தெரியும். ஊடகங்களுக்கும் எல்லாம் தெரியும். ஆட்சி கவிழ்கிறது என்று கொண்டாடப்படுகிறது. மெல்ல மெல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ளத் தொடங்குகிறோம்.
 
அமெரிக்க இராஜதந்திரிகள் எமது மக்களை சந்தித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிகாரிகள் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வரவுள்ளதாக நமது தலைவர்களிடம் தெரிவித்தனர். நாங்கள் விரும்புவதை எனது நாட்டு மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நாம் சுதந்திரமான, நேர்மையான தேசமாக வாழ விரும்புகிறோமா அல்லது ஒருவரின் அடிமைகளாக வாழ விரும்புகிறோமா?
 
இந்தியாவை மீண்டும் புகழ்ந்துள்ளார் இம்ரான்
இந்தியாவை மற்றவர்களை விட எனக்கு நன்றாக தெரியும். எனக்கு அங்கே உறவுகள் உள்ளன. ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்தம் மற்றும் காஷ்மீர் சூழ்நிலை காரணமாக எங்கள் உறவுகள் மோசமடைந்ததற்கு நான் வருந்துகிறேன்.
 
இந்தியாவைப் பற்றி இப்படிப் பேச யாருக்கும் தைரியம் இல்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தலையிட எந்த ஒரு வெளிநாட்டு சக்திக்கும் தைரியம் இல்லை. இந்தியா ஒரு பெருமைமிக்க நாடு.
 
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சுதந்திரமானது மற்றும் ஒவ்வொரு அழுத்தத்தையும் கடந்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது என்று பேசினார் இம்ரான் கான்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!