Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா தொற்றின் நான்காவது அலையின் பிடியில் ஜெர்மனி; ஐரோப்பா முழுவதும் அதிகரிக்கும் எண்ணிக்கை

கொரோனா தொற்றின் நான்காவது அலையின் பிடியில் ஜெர்மனி; ஐரோப்பா முழுவதும் அதிகரிக்கும் எண்ணிக்கை
, வியாழன், 18 நவம்பர் 2021 (11:55 IST)
கொரோனா தொற்றின் நான்காவது அலையின் மோசமான பிடியில் ஜெர்மனி சிக்கியிருப்பதாக அந்நாட்டின் சான்சலர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனா நெருக்கடி குறித்த பிராந்திய தலைவர்களுடனான சந்திப்பில் ஏங்கலா மெர்கல் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் கடந்த புதன்கிழமையன்று புதியதாக 52 ஆயிரத்து 826 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்

பொதுமுடக்கத்தை தவிர்க்க பெல்ஜியத்தில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

"கொரோனா குறித்து வரும் எச்சரிக்கை சமிக்ஞைகள் தீவிரமாக உள்ளன," என அந்நாட்டின் பிரதமர் அலெக்ஸாண்டர் டெ க்ரூ தெரிவித்துள்ளார். மேலும் அந்நாட்டில் மக்கள் புதிய சந்திப்புகளை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டும் என்றிருந்த நிலையில் தற்போது 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சனிக்கிழமையிலிருந்து ஒரு மாத காலத்திற்கு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயமாக்கப்படுகிறது. சினிமா, அருங்காட்சியகம் போன்ற இடங்களில் கோவிட் பாதுகாப்பு டிக்கெட் என்ற அனுமதி பாஸ்கள் கட்டாயம்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பெல்ஜியம் மக்கள் அனைவருக்கும் மூன்றாவது பூஸ்டர் தடுப்பு மருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ரியாவில் தடுப்பு மருந்து எடுத்து கொள்ளாத சுமார் 20 லட்சம் மக்கள் வெளியில் வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அங்கு தினசரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நெதர்லாந்தில் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அங்கு ஏற்கனவே பகுதியளவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனில் கச்சேரிகள் போன்று 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் உள் அரங்கு நிகழ்ச்சிகளுக்கு முதன்முறையாக கோவிட் தடுப்பு மருந்து பாஸ் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. டிசம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து இது அமலுக்கு வரும். மேலும் அங்கு தடுப்பு மருந்து எடுத்து கொள்ளாதவர்கள் நிச்சயம் தடுப்பு மருந்து எடுத்து கொள்ள வேண்டும் என அந்நாட்டின் சமூக விவகாரங்கள் துறை அமைச்சர் லெனா ஹலென்க்ரேன் தெரிவித்துள்ளார்.

செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸ், தடுப்பு மருந்து எடுத்து கொள்ளாதவர்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவந்த ஆதாரத்தை வழங்க வேண்டும் இல்லையேல் பொது இடங்கள் மற்றும் சேவைகளுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை முதல் கொரோனா நெகடிவ் என்ற சான்றிதழ் மட்டுமே போதாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்லோவாக்கியாவில் புதன்கிழமையன்று அதிகபட்சமாக புதியதாக 8,342 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அண்டை நாடான செக் குடியரசை போன்று கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பணியிடங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அல்லாத கடைகளுக்கு தடுப்பு மருந்து செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா முழுவதும் தடுப்பு மருந்து எடுத்து கொண்டவர்களின் சதவீதம் நாடுகளை பொறுத்து வித்தியாசப்படுகிறது. ஜெர்மனி மற்றும் ஆஸ்டிரியாவில் தடுப்பு மருந்து எடுத்து கொள்ள மக்கள் வரிசையில் காத்திருந்தாலும் மேற்கு ஐரோப்பாவில் குறைந்த அளவில் தடுப்பு மருந்து செலுத்தி கொண்டது அந்த இரு நாட்டு மக்கள்தான்.

ஜெர்மனியில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், தடுப்பு மருந்து செலுத்தி கொண்டவர்களுக்கு பெரும்பாலான இடங்களில் அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் அங்கு அரசு மாறவிருப்பதால் நிலை எவ்வாறு மாறும் என்பது தெரியவில்லை.

ஃபிரான்ஸில் கொரோனா தொற்றின் ஐந்தாம் அலையின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்டு மாதத்திலிருந்து தொடங்கி நேற்று அதிக எண்ணிக்கையில் புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. ஆனால் அங்கு தற்போது நடைமுறையில் இருக்கும் கோவிட் பாஸ்போட்களை தாண்டி வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 மாவட்டங்களில் 806 ஏரிகள் 100% நிரம்பின