Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இஸ்ரேல் எச்சரித்ததால் புகலிடம் தேடிச் சென்ற காசா மக்கள் மீதும் தாக்குதல் - யார் காரணம்?

இஸ்ரேல் எச்சரித்ததால் புகலிடம் தேடிச் சென்ற காசா மக்கள் மீதும் தாக்குதல் - யார் காரணம்?
, சனி, 14 அக்டோபர் 2023 (21:16 IST)
கடந்த 7 அக்டோபர் 2023 அன்று அதிகாலையில் இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை 20 நிமிடத்தில் ஏவி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தாக்குதலைத் தொடங்கினர். பின்னர் அதே நாளில் மீண்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டதுடன், ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் நாட்டிற்குள்ளும் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதில் 1,300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 150 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்ததுடன், பலரை காசாவுக்குக் கடத்திச் சென்றனர்.
 
ஹமாஸ் ஆயுதக் குழுவின் தாக்குதல் ஒரு தீவிரவாத நடவடிக்கை என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கண்டனம் தெரிவித்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இத்தாக்குதலைக் கண்டித்தன.
 
இதற்கிடையே, போருக்குத் தயார் நிலைப் பிரகடனத்தை இஸ்ரேல் பிறப்பித்ததுடன் உடனடி தாக்குதலையும் தொடங்கியது. இஸ்ரேலுக்கு உதவும் விதத்தில் அமெரிக்கா ஒரு போர்க்கப்பலையும் அனுப்பிவைத்தது. தாக்குதல் தொடங்கி ஒருவாரம் கடந்த நிலையில் காசா பகுதியில் தரைவழித் தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கியது. இந்தப் போரில் கிட்டத்தட்ட 2,000 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 3,38,000 பேர் இடம்பெயர்ந்தனர்.
 
காசா மீது வெள்ளிக்கிழமை நடத்திய தரைவழித் தாக்குதலில், காணாமல் போன இஸ்ரேலியர்களின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடத்திச் சென்ற இஸ்ரேலியர்களைக் கண்டுபிடிக்கும் நோக்குடன், இந்த தரைவழித் தாக்குதலை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலாக நடத்தியதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
 
 
வடக்கு காசாவில் வசிக்கும் 11 லட்சம் பாலத்தீனர்களை தெற்கு நோக்கி பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளதால் பொதுமக்களிடையே பீதி உருவாகியுள்ளது.
 
உள்ளூர் நேரப்படி காலை பத்து மணி முதல் மாலை 4 மணிவரை மட்டுமே இவ்வாறு பொதுமக்கள் இடம்பெயரவேண்டும் என்றும் இஸ்ரேல் கூறியது. பொதுமக்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் வாகனங்கள் மூலமாகவோ அல்லது கால்நடையாகவோ வெளியேறி வருகின்றனர். பொதுமக்கள் பயன்படுத்தவேண்டிய சாலைகளையும் இஸ்ரேல் ராணுவம் தெளிவாகத் தெரிவித்துள்ளது.
 
ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ், இப்படி பொதுமக்களை இடம்பெயரச் செய்வது மிகவும் ஆபத்தானது என்றும், மனிதாபிமான உணர்வுடன் இந்நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
 
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் பெய்ஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வடக்கு காசாவில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றும் இஸ்ரேலின் உத்தரவை "அமல்படுத்துவது முற்றிலும் சாத்தியமற்றது" என்று கூறினார்.
 
"காசாவைப் போன்ற ஒரு இடத்தில் 24 மணி நேரத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற முடியும் என்பதை கற்பனை செய்யக் கூட முடியாது என்றும் இது ஒரு மனிதாபிமற்ற நடவடிக்கையாக மட்டுமே இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.
 
 
பொதுமக்கள் இடம்பெயர கூடுதல் கால அவகாசம் அளிக்கவேண்டும் என இஸ்ரேல் நாட்டுக்கு பலதரப்பிலும் வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
 
இஸ்ரேலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்த போதிலும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கையில் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தைப் பின்பற்றுவதும் கடமையாகும் என்றும் அவர் எச்சரித்தார்.
 
ஜோர்டானின் வெளியுறவு அமைச்சர் அய்மன் சஃபாதி, பாலஸ்தீனர்களை இப்படி இடப்பெயர்ச்சி செய்ய முயலும் இஸ்ரேலின் எந்தவொரு நடவடிக்கையும் அந்தப் பகுதியில் ஒரு பெரும் மோதலுக்கு வித்திடும்" தள்ளும் என்று கூறினார்.
 
ஒரு அறிக்கையில், காசாவுக்கான மனிதாபிமான உதவியை இஸ்ரேல் தடுப்பதும், வடக்கில் உள்ள குடிமக்களை வெளியேற்றுவதற்கான உத்தரவும் சர்வதேச சட்டத்தை "அப்பட்டமான" மீறுகிறது என்றும் அவர் கூறுகிறார்.
 
இதற்கிடையே, காசாவின் வடபகுதியில் இருந்து இடம்பெயர்வதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
 
ஆன் அபு ஷரர் என்பவருடைய மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில், இந்த இடம்பெயரும் செயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. "எனது மனைவிக்கு இன்னும் 5 நாட்களில் குழந்தை பிறக்கவுள்ளது," என 29 வயது நிரம்பிய வழக்கறிஞர் ஆன் அபு ஷரர் வேதனையுடன் பிபிசிடம் தெரிவித்தார். "அவர் சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தையைப் பெற்றெருக்க ஒரு நல்ல மருத்துவமனையைக் கண்டறியும் தேவையில் இருக்கிறேன்."
 
இந்த தம்பதிக்கு, இஸ்ரேல் அரசின் உத்தரவு குறித்து வியாழக்கிழமையன்று இரவு தான் தெரியவந்துள்ளது. ஆனால், அவர்கள் காசாவில் உள்ள வீட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை என்றாலும், உறவினர்கள் வற்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. வாகனங்களிலும், கால்நடையாகவும் தெற்கு பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவர்களுடன் அவர்களும் இணைந்துகொண்டனர்.
 
அதனால் வெறும் இரண்டு மணிநேரத்தில் ஒரு குழந்தைக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு அவர்கள் கிளம்பிவிட்டனர். "நாங்கள் எங்கள் வீட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறினோம். ஆனால் நாங்கள் எங்கே போகிறோம் என்பது எங்களுக்குத் தெரியாது. எந்த ஒரு ஏற்பாட்டையும் செய்யமுடியவில்லை என்பது மட்டுமல்ல, எந்த இடமும் பாதுகாப்பான இடமாகத் தெரியவில்லை," என அவர் நடுங்கும் குரலில் தெரிவித்தார்.
 
இஸ்ரேல் விதித்துள்ள கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், அடுத்து என்ன நடக்குமோ என்று காசா மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
 
புகலிடம் தேடிச் சென்ற காசா மக்கள் மீது தாக்குதல்
இஸ்ரேல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இடம் பெயர்ந்த தெற்கு காசா நோக்கி இடம் பெயர்ந்த பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோரை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வாகனங்களில் ஒன்றின் மீது திடீர் தாக்குதல் நடந்தது. அந்த வாகனத்தில் சுமார் 30 பேர் இருந்ததாக தெரிகிறது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.
 
உயிர் பிழைக்க பாதுகாப்பான இடம் தேடிச் சென்ற பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் என்று பாலத்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேல் அரசோ, அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளது.
 
 
காசாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள் தகர்ந்து விழுந்துவிட்டன.
 
இப்போது அவர்கள் தெற்கு நகரமான ரஃபாவை அடைந்துள்ளனர். அங்குதான் ஏற்கெனவே இடம்பெயர்ந்து வந்த பாலத்தீன மக்கள் தங்கியுள்ளனர். அங்கு அவர்கள் தங்கள் குடும்பத்துடன் வசிக்கத் தொடங்கியுள்ளனர். ரஃபாவில் ஒரு நல்ல மகப்பேறு மருத்துவமனை இருப்பதால் அந்த இடத்தைத் தேர்வு செய்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
 
இப்படி இடம்பெயர்ந்து செல்லும் பொதுமக்களில் பலர் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். வரௌண்ட் அல்-டாகஃப் என்ற 24 வயது மாணவி, தனது குடும்பத்தினர் 7 பேருடன் இணைந்து தெற்கு பகுதிக்குப் பயணம் மேற்கொண்டார். அவரது குடும்பத்தினர் இப்போது டெயர் அல்-பாலா நகரில் ஒரே வீட்டில் 20 பேர் வசிக்கும் இடத்தில் தங்கியுள்ளனர். “நாங்கள் அமர்வதற்கு ஒரு சேர் கூட இங்கில்லை. என்னுடைய வீட்டை விட்டு வெளியேறி இப்படித் தவிப்பதை எப்படி விளக்குவதற்கு வார்த்தைகளே இல்லை” என்கிறார் அவர்.
 
கடந்த வார இறுதியில் இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பொதுமக்கள் மற்றும் ராணுத்தினர் மீது தாக்குதல் நடத்த எல்லை தாண்டியதில் 1300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
 
இதைத் தொடர்ந்து காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு நடவடிக்கையில் 2,000 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இஸ்ரேலில் இருந்து பிரிட்டன் குடிமக்களை மீட்பதற்காக அந்நாட்டு அரசு ஒரு சார்ட்டட் விமானத்தை வெள்ளிக்கிழமையன்று அனுப்பியது. அந்த விமானம் சைப்ரஸ் நாட்டில் தரையிறங்கியுள்ளது. டெல் அவிவ் நகரிலிருந்து சைப்ரஸ் நாட்டுக்கு மீட்பு விமானம் இரண்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே மற்ற வணிக ரீதியிலான போக்குவரத்து விமானங்கள் அனைத்தும் இஸ்ரேல் நாட்டுக்கான பயணங்களை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.
 
ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தனது எக்ஸ் பதிவில் அவசர மற்றும் ஆபத்து காலத் தேவைகளை பொதுமக்களுக்கு அளிப்பதற்காக நிவாரணப் பொருட்களுடன் ஒரு விமானத்தை அனுப்பியுள்ளதாகவும், அந்த விமானம் காசாவின் எல்லையில் இருந்து சுமார் 28 மைல் (45 கிமீ) தொலைவில் உள்ள எகிப்திய நகரமான ஆரிஷில் தரையிறங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
 
 
திங்களன்று எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியுடன் அவர் பேசியதைத் தொடர்ந்து தொடர்ந்து, இந்த விமானம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
 
காசாவை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ள நிலையில், அங்கு எரிபொருள், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை இந்த முற்றுகை நீடிக்கும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை அளிப்பதற்காக முற்றுகையைத் திரும்பப்பெறுமாறு ஐ.நா. சபை இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.
 
காசாவுடனான இஸ்ரேல் எல்லையில் சுமார் 3,00,000 பாதுகாப்பு வீரர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது.
 
இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டிற்குள் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் லெபனானில் இருந்து எல்லை தாண்ட முயற்சித்த ஏராளமானோரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
 
காசா மீது நடக்கவுள்ள தரைவழித் தாக்குதல் குறித்த செய்திகள் சனிக்கிழமையன்று ஊடகங்களின் முதல் பக்கங்களில் அதிக எண்ணிக்கையில் வெளியாகியுள்ளன.
 
முன்னதாக வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட உள்ளூர் அளவிலான சோதனைகள் இஸ்ரேலிய பணயக்கைதிகளைக் கண்டுபிடித்து "பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதங்கள் அடங்கியுள்ள பகுதியை சுத்தப்படுத்தும்" நோக்கம் கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக டெய்லி டெலிகிராப் மேற்கோள் காட்டுகிறது.
 
டெய்லி மெயில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை மேற்கோள் காட்டி இந்த நடவடிக்கை "வெறும் ஆரம்பம்" என்றும், "இந்த போரை முன்னெப்போதையும் விட வலுவாக முடிப்போம்" என்று சபதம் செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
 
காசா ஒரு "நரக குழிக்குள்" இறங்குவதாகவும், "சரிவின் விளிம்பில்" இருப்பதாகவும் தி ஐ நியூஸ் எச்சரித்துள்ளதாகவும், ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், ​​அப்பகுதியில் உள்ள 4,23,000 க்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ நியூஸ் கூறியுள்ளது.
 
"அப்பாவிகளுக்கு உயிர் வாழ வாய்ப்பு கொடுங்கள்" என்று டெய்லி எக்ஸ்பிரஸில் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. "ஹமாஸ் செய்த பாவங்களுக்காக காசா குடிமக்கள் பாதிக்கப்படக்கூடாது" என்று கேன்டர்பரி பேராயர் இஸ்ரேலுக்கு விடுத்துள்ள வேண்டுகோளையும் டெய்லி எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.
 
சனிக்கிழமையன்று லண்டனில் பாலத்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற நிலையில், ங்கிலாந்தில் மெட் போலீசார் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர் என்றும், எந்த வித தாக்குதலும் நடக்காமலிருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாகவும் டெய்லி மிரர் கூறுகிறது. துணை உதவி ஆணையர் லாரன்ஸ் டெய்லர், "மிக முக்கியமான காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக" தெரிவித்திருந்தார் என்றும் டெய்லி மிரர் கூறுகிறது.
 
ஹமாஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு மக்கள்
கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இப்படி உயிரிழந்த 100 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் பட்டியலைத் தொகுத்து ஏஎஃப்பி (AFP )வெளியிட்டுள்ளது, உயிரிழந்த, காணாமல் போன அல்லது பணயக் கைதிகளாகச் சிக்கியுள்ள வெளிநாட்டினர் குறித்த தகவல்கள் ஒவ்வொரு நாட்டு அரசும் தெரிவித்துள்ள தகவல்களுடன் இணைத்து உறுதி செய்யப்பட்டுள்ளது:
 
அமெரிக்கா: 27 பேர் உயிரிழப்பு
 
தாய்லாந்து: 24 பேர் உயிரிழப்பு
 
பிரான்ஸ்: 15 பேர் உயிரிழப்பு
 
நேபாளம்: 10 பேர் உயிரிழப்பு
 
அர்ஜென்டினா: 7 பேர் உயிரிழப்பு
 
உக்ரைன்: 7 பேர் உயிரிழப்பு
 
ரஷ்யா: 4 பேர் உயிரிழப்பு
 
இங்கிலாந்து: 4 பேர் உயிரிழப்பு
 
சிலி: 4 பேர் உயிரிழப்பு
 
ஆஸ்திரியா: 3 பேர் உயிரிழப்பு
 
பெலாரஸ்: 3 பேர் உயிரிழப்பு
 
கனடா: 3 பேர் உயிரிழப்பு
 
சீனா: 3 பேர் உயிரிழப்பு
 
பிலிப்பைன்ஸ்: 3 பேர் உயிரிழப்பு
 
பிரேசில்: 3 பேர் உயிரிழப்பு
 
பெரு: 2 பேர் உயிரிழப்பு
 
ருமேனியா: 2 பேர் உயிரிழப்பு
 
ஆஸ்திரேலியா, அஜர்பைஜான், கம்போடியா, அயர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, கொலம்பியா, பராகுவே ஆகிய ஒவ்வொரு நாட்டினரும் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும்,
 
ஜெர்மனி, மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த பலர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம், இத்தாலி, பராகுவே, இலங்கை, தான்சானியா நாடுகளைச் சேர்ந்த பலரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அமெரிக்க குடிமக்கள் காசாவை விட்டு ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் செல்ல முடியும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
இஸ்ரேலிய மற்றும் எகிப்திய அரசுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையைத் தொடர்ந்து, இன்று உள்ளூர் நேரப்படி 12:00 மணி முதல் 17:00 மணி வரை கடவுப்பாதை திறந்திருக்கும்.
 
காசாவைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ், அமெரிக்கக் குடிமக்கள் பிரதேசத்தை விட்டு வெளியேற அனுமதிக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
 
லெப்டினன்ட் கர்னல் கான்ரிகஸ் கூறுகையில், காசா பகுதியைச் சுற்றிலும் இஸ்ரேலிய ரிசர்வ் வீரர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகின்றனர் என்றார்.
 
"எங்கள் நோக்கம் மிகத் தெளிவாக உள்ளது, இந்தப் போரின் இறுதிக் கட்டம், ஹமாஸ் மற்றும் அதன் ராணுவத் திறன்களை சிதைத்து, அடிப்படையில் நிலைமையை மாற்றுவோம். இதனால் ஹமாஸ் மீண்டும் ஒருபோதும் இஸ்ரேலிய குடிமக்கள் அல்லது வீரர்கள் மீது எந்தவிதமான தாக்குதலையும் நடத்த முடியாது."
 
லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு நிகழ்வைப் பற்றி அவர் பேசும் போது, “நாங்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் இஸ்ரேலிய ராணுவத்தினரை நோக்கி டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை வீசினர். சிறிது நேரம் போர் நடந்தது, இறுதியில் நிலைமை அமைதியானது," என்று கூறினார். "பின்னர் ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு ட்ரோன்களை அனுப்பியது என்பதுடன் இஸ்ரேலிய விமானங்களுக்கு எதிராக தரையிலிருந்து ஏவுகணைகளை வீசியது."
 
அந்த இரண்டு முயற்சிகளும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. ஆனால் வடக்கு எல்லையில் நிலைமை "மிகவும் பதட்டமாக உள்ளது" என்றார் அவர்.
 
இஸ்ரேலை எதிர்த்து கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போரில் ஈடுபடப்போவதாக ஹமாஸ் குழுவினர் அறிவித்துள்ளர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உத்தரவு