Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஹிந்தி பாடலுக்கு இந்தியா, வங்கதேசத்தில் ஒருசேர எதிர்ப்பு - ஏன்?

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஹிந்தி பாடலுக்கு இந்தியா, வங்கதேசத்தில் ஒருசேர எதிர்ப்பு - ஏன்?
, புதன், 15 நவம்பர் 2023 (21:20 IST)
வங்கதேசத்தின் தேசியக் கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாமின் குடும்பத்தினர் அக்கவிஞரின் மிகவும் பிரபலமான பாடலான 'கரார் ஓய் லவ் கபட் ' (சிறையின் அந்த இரும்புக் கதவை உடைப்போம்) என்ற பாடலை ஒரு ஹிந்தி திரைப்படத்தில் பயன்படுத்த அனுமதி அளித்தனர்.
 
ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியாகியுள்ள இந்தப் பாடலை படக்குழுவினர் பயன்படுத்திய விதத்திற்கு நஸ்ருல் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இந்த சர்ச்சைக்குப் பிறகு, அந்தப் பாடல் எந்த ஒப்பந்தத்தின் கீழ் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கவிஞரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற இந்திய ராணுவ வீரரின் உண்மைக் கதையை மையமாக வைத்து ‘பிப்பா‘ என்ற ஹிந்திப் படத்தில் இந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
 
இப் பாடலின் வார்த்தைகள் சரியாக இருந்தும், பாடலின் ட்யூனை மாற்றியதாகக் கூறப்படும் விவகாரத்தில் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.
 
பாடலை பயன்படுத்த அனுமதி அளித்துள்ள போதிலும், பாடலின் ட்யூனை மாற்ற அனுமதி வழங்கவில்லை என கவிஞரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
 
மேலும் அந்த பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
காஸி நஸ்ருல்லாவின் கவிதையை ஹிந்தித் திரைப்படத்தில் பயன்படுத்தியதில், கவிதையின் டியூன் மாற்றப்பட்டுள்ளதாக மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது.
 
கொல்கத்தா (அப்போது கல்கத்தா) கிறிஸ்டோபர் சாலையில் உள்ள இந்த வீட்டில் நஸ்ருல் இஸ்லாம் பத்து ஆண்டுகள் வாழ்ந்தார்.
 
பாடலில் 'கபட்' என்ற சொல் மிகவும் பிரபலமானது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். ஆனால் 1949 ஆம் ஆண்டு முதல் பதிவு வெளியான போது அதில் இருந்த கபட் என்ற சொல்லின் உச்சரிப்பும், தொனியும் வேறு மாதிரி இருந்தது.
 
நஸ்ருல் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர் ஒருவர், அந்தக் கவிஞர் உண்மையில் எந்தச் சொல்லை பாடலில் எழுதினார் என்பதைக் கண்டுபிடிக்க வழி இல்லை என்று கூறுகிறார். இதற்குக் காரணம், அந்தப் பாடலை கையால் எழுதிய கையெழுத்துப் பிரதி தற்போது அழிந்து விட்டது என்பதுதான்.
 
ஆராய்ச்சியாளர் ஆர்கோ தேவ் இது குறித்துப் பேசிய போது, "இந்தப் பாடல் 25 ஆண்டுகளாக மக்களின் நினைவில் இருந்தது. அதனால்தான் கபட் என்ற சொல்லின் இரு உச்சரிப்புகளை வழங்கும் இரண்டும் வேறு வேறு வார்த்தைகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது. ஒரு வார்த்தை மற்றொன்றின் சிதைவு என்பதுடன் இது மொழியில் பொதுவான நிகழ்வாகவே இருக்கிறது," என்றார்.
 
2021 ஆம் ஆண்டில், மிகவும் பிரபலமான இந்தப் பாடலைப் பயன்படுத்துவதற்காக தயாரிப்பு நிறுவனத்திற்கும், கவிஞரின் மருமகள் கல்யாணி காஸிக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு ஈடாக அவருக்கு ரூ.2 லட்சம் ராயல்டியும் வழங்கப்பட்டது.
 
ஆனால் பாடலின் டியூனை சிதைக்க ஒப்பந்தம் அனுமதிக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். கவிஞரின் மருமகள் கல்யாணி காஸி இந்த ஆண்டு மே மாதம் காலமானார்.
 
கல்யாணி காஸியின் மகன் காஸி அனிர்வன் பிபிசியிடம் பேசியபோது, ​​"அந்த ஒப்பந்தத்திற்கு நான் சாட்சியாக இருந்தேன். ஆனால் அதில் உள்ள எந்த இடத்திலும் டியூனையோ, வார்த்தைகளையோ மாற்ற என் அம்மா அனுமதி அளிக்கவில்லை," என்றார்.
 
தொடர்ந்து பேசிய அவர், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்தான ஒப்பந்தம் எங்களுக்கு நினைவில் இல்லை. இதற்கிடையில், இந்த ஆண்டு மே 12 அன்று, என் அம்மா இறந்துவிட்டார். திடீரென்று ஒரு நாள் தயாரிப்பு நிறுவனம் பாடலின் இணைப்பை எனக்கு அனுப்பியது. அதைக் கேட்கச் சொன்னார்கள். பாடலின் விளக்கத்தைக் கேட்ட பிறகு, ஏ.ஆர்.ரஹ்மான் என்ன செய்தார் என்று தெரியவந்தது. இதனால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்," எனத்தெரிவித்தார்.
 
ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபல இசையமைப்பாளர் இந்தப் பாடலைப் பயன்படுத்தினால் உலகம் முழுவதும் விளம்பரம் கிடைக்கும் என்று அவரது அம்மா நினைத்ததாகக் கூறினார்.
 
“இதனால், அவரை நம்பி, தாத்தாவின் பாடலைப் பயன்படுத்த அம்மா அவருக்கு அனுமதி அளித்தார். பாட்டு தயார் ஆனபிறகு அவருக்கு இசைத்துக் காட்ட வேண்டும் என்றும் அம்மா சொல்லியிருந்தார்கள். ஆனால் அப்படி எதுவும் காட்டப்படவில்லை. இது ஒப்பந்தத்தின் தெளிவான மீறலாகும்.”
 
இந்த சர்ச்சை தொடங்கிய பிறகு, நஸ்ருலின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொருவர் ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளார்.
 
காஸி அனிர்வனின் சகோதரியும் கவிஞர் நஸ்ருலின் பேத்தியுமான அனிந்திதா காஸி, அமெரிக்காவிலிருந்து தொலைபேசியில் பிபிசியிடம் பேசுகையில், "தாதா ஜியின் பாடலைப் பயன்படுத்துவதில் ஏ.ஆர். ரஹ்மானுடன் இதுபோன்ற ஒப்பந்தம் உள்ளது என்பது குறித்து என் அம்மாவோ அல்லது என் சகோதரரோ இதுவரை எனக்குத் தெரிவிக்கவில்லை," என்றார்.
 
“அம்மா எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளும் மாணவிகளுக்குக் கூட இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் என் அண்ணன் அந்த ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்தவில்லை? அப்படிச் செய்திருந்தால் எல்லாவற்றையும் தெளிவாகத் தெரிந்திருக்கலாம். இதை நம்ப முடியாது. ஒருவேளை என் தாத்தாவின் பாடலின் டியூனை மாற்றவோ அல்லது மீண்டும் உருவாக்கவோ அம்மா என்னை அனுமதிப்பார்."
 
டாக்காவில் வசிக்கும் காஸி நஸ்ருல் இஸ்லாமின் பேத்தி கில்கில் காஸியும் இந்த டியூனை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
வங்கதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏ.ஆர்.ரஹ்மான் பாடலின் டியூனையும் சொற்களையும் மாற்றியதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற அவர் அதை குற்றம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
கவிஞரின் குடும்ப உறுப்பினர்களும் நஸ்ருல் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்களும் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த வேலையை வரலாற்றைத் திருடுவதாகக் கூறுகிறார்கள். கவிஞரின் படைப்பை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை என்கின்றனர் நஸ்ருல் குடும்பத்தினர்.
 
கவிஞரின் மற்றொரு பேரன் காஸி அரிந்தம் கூறுகையில், "ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர் ஏன் இப்படி செய்தார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது வெறும் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினை அல்ல. ’லோ கபட்’ ஒரு இயக்கம் மற்றும் போராட்டமாக இருந்தது. அதற்காக என் தாத்தா பெரும் விலை கொடுக்க வேண்டியதாயிற்று. அந்த வரலாறு சிதைக்கப்பட்டுள்ளது," என்றார்.
 
இந்தியச் சட்டங்களின்படி, கவிஞர் நஸ்ருலின் அனைத்துப் படைப்புகளின் பதிப்புரிமை 2036ஆம் ஆண்டு வரை அவரது குடும்பத்தினரிடமே இருக்கும்.
 
தற்போது நஸ்ருல் குடும்பம் படத்தில் தங்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்ட சிறப்பு நன்றியை நீக்க வேண்டும் என்றும் முடிந்தால் அந்த பாடலையே படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
ஆனால் தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்களா என்பது தெரியவில்லை.
 
இருப்பினும், தற்போது 'கரார் ஓய் லோ கபட்' பாடல் தொடர்பான விவாதத்தை கருத்தில் கொண்டு, 'பிப்பா' படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர்கள் பாடல்கள் குறித்து தெளிவுபடுத்த விரும்புவதாக 'பிப்பா' படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. “எங்கள் விளக்கக்காட்சி ஒரு நேர்மையான கலை விளக்கம், இது சம்பந்தமாக தேவையான உரிமைகளைப் பெற்ற பின்னரே பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது,” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
 
படப்பிடிப்பு குழு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில், "இந்திய துணைக்கண்டத்தின் இசை, அரசியல் மற்றும் சமூக சூழலுக்கு அளவிட முடியாத பங்களிப்பை வழங்கிய மறைந்த காஸி நஸ்ருல் இஸ்லாம் அவர்களின் அசல் இசையமைப்பிற்காக நாங்கள் ஆழ்ந்த மரியாதை கொண்டுள்ளோம். வங்கதேச விடுதலைக்காக அரும்பாடுபட்ட அந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் விடுதலை மற்றும் சுதந்திரம், அமைதி மற்றும் நீதிக்கான போராட்டத்தின் உணர்வோடு தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர் காஸி நஸ்ருல் இஸ்லாம்,” எனக்குறிப்பிட்டுள்ளது.
 
யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட பாடலின் தொடக்கத்தில், சில நாட்டுப்புற இசைக்கருவிகளைப் பயன்படுத்தி அறிமுகமில்லாத டியூனில் 'காரர் ஓய் லௌஹ் கபட்' பாடல் பாடப்பட்டுள்ளது.
 
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் பாடலின் அடிப்படை சாராம்சத்தை புரிந்து கொள்ள தவறியிருக்கலாம் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
கொல்கத்தாவைச் சேர்ந்த கலைஞர் பாப்ஜி சன்யால் கூறுகையில், "இந்தப் பாடலோ அல்லது ரவீந்திரநாத்-நஸ்ருலின் பாடல்களிலோ மக்களின் உணர்வுகள் இணைக்கப்பட்டுள்ளன. பாடலின் வரலாறும் பின்னணியும் ரஹ்மான் இசையமைத்த விதத்துடன் ஒத்துப்போவதில்லை. பாடலை நவீனமாக அவர் விவரித்துள்ளார்,” என்றார். "நாங்கள் அதை உருவாக்க முயற்சித்தோம். ஆனால் இறுதியில் இந்த பாடலின் சிதைந்த பதிப்பை நாங்கள் பெற்றுள்ளோம்."
 
டாக்காவின் பிரபல இசைக்கலைஞர் மக்சுதுல் ஹக் தொண்ணூறுகளில் நவீன இசைக் கருவிகளின் உதவியுடன் ரவீந்திர சங்கீதத்தைப் பாடி பெரும் சர்ச்சையில் சிக்கினார். ஆனால் அவரும் பாடலை மாற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
மக்சுதுல் ஹக் பேசிய போது, "ஒரு பிரபலமான பாடலின் டியூனை அப்படியே வைத்துக்கொண்டு இசைக்கருவிகளின் உதவியுடன் யாராவது பரிசோதனை செய்ய விரும்பினால், அவர் அதைச் செய்யலாம். ஆனால் அசல் டியூன் செயல்பாட்டில் அழிக்கப்பட்டால், அது ஆட்சேபனைக்குரியது," என்றார்.
 
காஸி நஸ்ருல் இராணுவத்திலிருந்து திரும்பிய உடனேயே இந்தப் பாடலை எழுதினார்.
 
படத்தின் பாடல்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட உடனேயே, இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் மக்கள் இசையமைப்பாளர் ரஹ்மானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இவர்களில் பெரும்பாலானோர் ட்யூனை மாற்றியதற்காக ரஹ்மான் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த பாடலுக்கு குரல் கொடுத்த வங்க கலைஞர்களும் விமர்சிக்கப்படுகிறார்கள்.
 
பாடகி ஃபஹ்மிதா நபி,"ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களே ஒரு சிறந்த இசையமைப்பாளர். படத்தின் தேவைக்கு ஏற்ப வேறு எந்த பாடலையும் அவரே டியூனில் எழுதியிருக்கலாம். அல்லது பாடலை சரியான டியூனில் பயன்படுத்தியிருக்கலாம். இந்த அவமானத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்,” என சமூக வலைதளப்பக்கத்தில் எழுதியிருக்கிறார்.
 
எழுத்தாளர் தமன்னா ஃபிர்தௌஸ் தனது ஃபேஸ்புக் பதிவில், “ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த லோஹா கபட் பாடலைக் கேட்டவுடன், இந்தப் பாடலைப் பற்றியும், வங்காளிகளின் உணர்வுப்பூர்வமான தொடர்பைப் பற்றியும் அவருக்குத் தெரியாது என்று தோன்றியது. இதில் கூட கவனம் செலுத்தப்படவில்லை. ஆஸ்கார் விருது பெற்ற ஒரு கலைஞரின் இத்தகைய திமிர்த்தனமான, தொழில்சார்ந்த நடத்தையை ஏற்க முடியாது," எனத்தெரிவித்துள்ளார்.
 
இத்தகைய தொழில்சார்ந்த நடத்தைக்காக, அவர் முழு வங்காள சமூகத்தாலும் மன்னிக்கப்பட வேண்டும் மற்றும் வருத்தத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
 
நஸ்ருல் இசைக்கலைஞர் ஃபிர்தௌஸ் ‘ஐ’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “புதியவர்களின் வேலை புதுமையாக இருக்கும். அது ஒருவித ஃப்யூஷனாக இருந்தாலும் மனம் பரவாயில்லை. ஆனால் அதன் ட்யூன் திடீரென வித்தியாசமானது ஏன் என்று தெரியவில்லை. அதைக் கேட்பது கடினம். ஆனால் அது எந்தப் பாடல் என்று உங்களால் அறிய முடியாது. அதை அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கும்போது, ​​​​ஒரு கேள்வி எழுகிறது. அவர்கள் நஸ்ருலின் பாடலில் பணியாற்ற வேண்டும். இதை விட சிறப்பாக எதுவும் இருக்க முடியாது. ஆனால் பிரச்னை என்னவென்றால், பாடலின் வரிகளை நஸ்ருல் எழுதியுள்ளார். ஆம், ஆனால் டியூன் வேறு," எனத்தெரிவித்தார்.
 
 
இளம் வயதில் காஸி நஸ்ருல்லா சுதந்திரம் குறித்த சிந்தனையில் கழித்தார்.
 
ஒரு சிறிய ஆய்வில், வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு பார்வைகளைக் கொண்டிருப்பதையும் நம்மால் காணமுடிகிறது. ரஹ்மான் தயாரித்த ட்யூன் மோசமானது என இந்தக் குழுவில் உள்ள அனைவரும் குறைகூறினர் எனக்கருதமுடியாது. எந்தவொரு பாடலையும் மாற்றியமைக்க கலைஞருக்கு சுதந்திரம் இருப்பதாக சிலர் வாதிடுகின்றனர்.
 
கொல்கத்தாவில் ஃபேஸ்புக்கில் பெரிய அளவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர் ஜெயந்த் சௌத்ரி ஒரு உதாரணம் கொடுக்கிறார்: "டின்னர் ஷேஷே கூமர் தேஷே என்ற ரவீந்திர சங்கீத்தின் ட்யூனை பங்கஜ் குமார் மல்லிக் தனது விருப்பம் போல் மாற்றி இசையமைத்தார்."
 
"எங்கே பிரச்சனை? ஒரு டியூன் நல்லது, ஒன்று இல்லை. அதுதான். உங்களுக்கு அது மோசமாக இருந்தால் கேட்க வேண்டாம். நஸ்ருல் எழுதிய கவிதையில் யாராவது புதிய டியூனைப் பயன்படுத்தியிருந்தால், அப்புறம் எதுக்கு இவ்வளவு கூச்சலிட்டு அழறீங்க?" என்ன கதறல்? ஏன் தனிமனித தாக்குதல்கள்? பிடிக்கவில்லை என்றால் தெளிவாகச் சொல்லுங்கள். விமர்சியுங்கள். ரஹ்மானுக்கு டியூன் மற்றும் மியூசிக் பற்றி அறிவுரை சொல்லுங்கள். ஆனால் உங்களது கதறலுக்கு என்ன காரணம்? இந்த கூக்குரல் மற்றும் அரசியலாக்குவது ஆகியவை வங்கதேசியவாதத்தை முன்வைப்பதுதானே. அது எதற்காக?" எனக்கேள்வி எழுப்பியுள்ளார்.
 
வங்கதேசத்தைச் சேர்ந்த டானியா நபார் தனது ஃபேஸ்புக் பதிவில், "நம் திறமையை சந்தேகிப்பதால், யாரேனும் ஒரு பாடலை தரக்குறைவாகப் பாடினால், புலம்பத் தொடங்குகிறோம். வேறு நாட்டில் வேறு மொழியின் இசைக்கலைஞர் ஒரு புதிய டியூனை உருவாக்கி, அவமானப்படுத்துகிறார். அப்படியானவர்கள் நஸ்ருலின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டதாக நான் நினைக்கவில்லை. நஸ்ருலின் படைப்புகளை பாதுகாத்து உலக அரங்கிற்கு கொண்டு செல்வதுதான் அவருக்கு சரியான மரியாதை," என எழுதியுள்ளார்.
 
இருப்பினும், இதனுடன், ஏ.ஆர்.ரஹ்மானின் ட்யூனுடன் கூடிய அந்தப் பாடல் தனக்குப் பிடிக்கவில்லை என்றும் தானியா எழுதியுள்ளார்.
 
வங்கதேசக் கவிஞரும் இலக்கியவாதியுமான பிரத்யா ரைசு பேசியபோது, "இந்தப் பாடல் 102 வருடங்கள் பழமையானது. இப்போது ரவீந்திர சங்கீத் ட்யூனில் யார் வேண்டுமானாலும் இதைப் பாடலாம். இதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை சரியானது" என்று கூறுகிறார்.
 
பிரத்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "ஏ ஆர் ரஹ்மானின் இந்தப் பாடலை கேட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறீர்களா? அதை விட்டுவிட்டு, நஸ்ருலின் இசையில் அசல் பாடலைப் பகிரலாமே. ரஹ்மானின் பாடல்கள் எனக்குப் பிடிக்கவில்லை,” என்றும் எழுதியுள்ளார்.
 
வங்கதேசத்தில் உள்ள தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ரௌனக் ஹசன் முதல் முறையாக பாடலைக் கேட்டபோது பிடிக்கவில்லை என்றும், ஆனால் பலமுறை கேட்ட பிறகும் அவ்வளவு மோசமாகத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
 
இது குறித்து ஃபேஸ்புக்கில் அவர் எழுதியுள்ள பதிவில், "எந்தப் பின்னணியில் படத்தில் இப்பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவ்வளவு அதிருப்தியை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, அதைப் புறக்கணிக்கலாம். ஆனால் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியதால், எதிர்காலத்தில் இது போன்ற மாற்றங்களைச் செய்யும் தைரியம் வேண்டாம். எதிர்காலத்தில் அவர் அதை செய்யமாட்டார்," என எழுதியுள்ளார்.
 
குறிப்பாக 1920 மற்றும் 1930 ஆண்டுகளில் காஸி நஸ்ருல் இஸ்லாத்தின் வாழ்க்கை குறித்து ஆர்கோ டெப் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார். இந்தப் பாடல் அந்தக் காலத்தின் இசையமைப்பின் ஒரு அங்கமாக இருந்தது என அவர் கூறுகிறார்.
 
பிபிசி பெங்காலியிடம் பேசிய டெப், "அப்போது, ​​​​கவிஞர் ராணுவத்திலிருந்து திரும்பி வந்து கல்கத்தாவின் காலேஜ் தெரு பகுதியில் வசித்து வந்தார். கம்யூனிஸ்ட் தலைவர் முசாபர் அகமதுவும் அவருடன் வாழ்ந்தார். அந்தக் கால வரலாற்றிலிருந்து காஸியை நான் அறிந்தேன். தேஷ்பந்து சித்தரஞ்சன் தாஸைப் பற்றியும் நஸ்ருல் எழுதியிருந்தார். காரர் ஓய் லவ் கபட் என்ற பாடல் அவரது மனைவி பசந்தி தாஸின் வேண்டுகோளின் பேரில் இயற்றப்பட்டது. அதன் பின்னணி இதுதான் - 10 டிசம்பர் 1921 அன்று பிரிட்டிஷ் காவல்துறை தேஷ்பந்துவை கைது செய்தது. இந்தப் பிண்ணனியில் தான் அது எழுதப்பட்டது,” என்றார்.
 
அவர் மேலும் பேசிய போது, “மனைவி பசந்தி தேவி அவர் நடத்தும் பெங்காலி கதா பத்திரிகையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கவிஞர் நஸ்ருல் சித்தரஞ்சன் தாஸுக்கு மிகவும் நெருக்கமானவர். இதற்குப் பிறகு, அடுத்த இதழில் தேஷ்பந்துவுக்கு நெருக்கமானவர்களின் எழுத்துக்களை வெளியிடுவது என்று பசந்தி தேவி முடிவு செய்தார். இது தொடர்பாக, காஸி நஸ்ருலிடம் கணக்கு காட்டும்படியும் கோரிக்கை விடுத்தார். அவர் அந்தக் கவிதையை ஒரு காகிதத்தில் எழுதி சுகுமார் ரஞ்சன் தாஸ் என்ற நபரின் கைகளில் பசந்தி தேவிக்கு அனுப்பினார்,” என்றார்.
 
அந்த பாடல் ஜனவரி 20, 1922 இதழில் வெளியிடப்பட்டது என்று டெப் கூறுகிறார். அதாவது 1921 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியிலிருந்து ஜனவரி முதல் இரண்டு வாரங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தக் கவிதை எழுதப்பட்டது.
 
“அப்போது கவிஞருக்கு இருபது வயது. இந்த கவிதை 1922 ஆம் ஆண்டு பங்கர் கான் என்ற புத்தகத்தில் தொகுக்கப்பட்டது. நீங்கள் கவனித்தால், கவிஞர் அதில் 't' என்ற ஒரு இணைச்சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். இது பொதுவாக ராப் இசையில் காணப்படுகிறது.”
 
 
வங்கதேச விடுதலைக்காக நடந்த தாக்குதலில் அந்நாட்டுக்கு ஆதரவாக இந்தியா களத்தில் இறங்கியது.
 
இது குறித்து மேலும் விளக்கிய டெப், "ராப் எப்போதுமே எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தினார். அதே போல் தான் நஸ்ருல் பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கத்தில் அதே எதிர்ப்பு வசனங்களைப் பயன்படுத்தி சாதாரண மக்களின் மனதைக் கிளறினார். அவர் சமீபத்தில் ராணுவத்திலிருந்து திரும்பியிருந்தார். அதனால்தான் இந்தப் பாடலின் போக்கு அப்படியிருந்தது. இந்த பாடல் முதலில் தொகுக்கப்பட்ட 'பாங்கர் கான்' புத்தகம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது," என்றார்.
 
இந்தியா சுதந்திரம் அடையும் வரை இந்தப் பாடல் எந்த தொகுப்பிலும் இல்லாததற்கு இதுவே காரணம் என்று அவர் கூறினார்.
 
"இந்தப் பாடலின் ட்யூன் சுமார் 25 ஆண்டுகளாக மக்கள் மனதில் பதிந்திருந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதல் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரை சிறையில் இருந்தபோது இந்தப் பாடலைத் தொடர்ந்து பாடியிருக்கிறார்கள்" என்கிறார் ஆர்கோ.
 
தொடர்ந்து பேசிய அவர், “நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1949-ம் ஆண்டு முதல் முறையாக இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டது. கிரின் சக்ரவர்த்தியின் குரலில் கொலம்பியா ரெக்கார்ட் கம்பெனி தயாரித்த அந்தப் பதிவு ஜூன் 1949 இல் விற்பனைக்கு வந்தது.
 
அதே ஆண்டில், சட்டோகிராம் அஸ்ட்ராகார் லுந்தன் திரைப்படத்தில் கிரின் சக்ரவர்த்தியின் குரலில் அந்தப் பாடல் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது,” என்றார்.
 
“இந்தப் பாடலுடன் தொடர்புடைய வரலாறு திரிக்கப்பட்டிருக்கிறது என்கிறார். ரஹ்மான் பாடலை விளம்பரப்படுத்திய விதத்தில் இந்தப் பாடல் உலகம் முழுவதும் பரவியுள்ளது. காஸி நஸ்ருலின் இந்த காலத்தால் அழியாத பாடலை அடுத்த தலைமுறை கேட்கும். ஒருவேளை அதை அசல் ட்யூனாகத் தான் அவர்கள் கருதுவார்கள்.”
 
 
காஸி நஸ்ருலின் பாடலில் ரஹ்மான் டியூனை மாற்றியதற்காக அவர் மீது பெரும்பாலானோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
ஆனால், கவிஞரின் பேரன் காஸி அனிர்வன் முதல் நஸ்ருலைப் பற்றி ஆராய்ச்சி செய்த அர்கோ டெப் வரை பலர் ரஹ்மானுக்கு வங்காள மொழி தெரியாது என்றும், எனவே பாடலின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில் அவர் தவறு செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
 
"ஆனால் இந்தப் பாடலுக்கு பின்னணி குரல் கொடுத்தவர்கள் வங்காளிகள். அவர்கள் இந்தப் பாடலின் வரலாற்றுப் பின்னணி, உண்மையான ட்யூன் என்ன என்பதைச் சொல்லியிருக்கலாம். இதைச் சொல்ல அவர்களுக்குத் தைரியம் இருக்கிறதா?" என்று காஸி அனிர்வன் கேள்வி எழுப்பினார்.
 
 
சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் இந்தப் பாடலின் டியூனை மாற்றியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது 1971 விடுதலைப் போரின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம்.
 
இது ஓய்வுபெற்ற இந்திய ராணுவ பிரிகேடியர் பல்ராம் சிங் மேத்தா எழுதிய 'தி பர்னிங் சாஃபிஸ்' என்ற நினைவுக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டது.
 
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்24 சாஃபி டேங்க் அப்போது பாகிஸ்தான் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது.
 
பிரிகேடியர் மேத்தாவின் புத்தகத்தைத் தவிர, கரீப்பூர் போர் எனப்படும் இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் இரண்டு டாங்கிப் படைகளுக்கு இடையே நடந்த அந்த பயங்கரமான போரின் விவரங்களும் பேராசிரியர் முண்டாசிர் மாமூனின் தலையங்கத்தில் வெளியிடப்பட்ட முக்தி யுத் கோஷின் ஆறாவது தொகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. அதில்,“கரிப்பூர் என்ற பெயரிடப்படாத கிராமம் ஜசோர் கரையிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், இந்திய எல்லையில் இருந்து கிழக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
 
21 நவம்பர் 1971 அன்று, நட்பு நாட்டின் பாதுகாப்பு நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியபோது, ​​​​இரு தரப்புக்கும் இடையே பயங்கரமான போர் நடந்தது. இதில், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பிடி-76 டேங்க் ஸ்குவாட்ரான் தலைவர் மேஜர் தல்ஜித் சிங் நரங் வீரமரணம் அடைந்ததையடுத்து, கேப்டன் பல்ராம் சிங் மேத்தாவுக்கு ராணுவப் படைப் பொறுப்பு கிடைத்தது.
 
இந்திய ராணுவம் பாகிஸ்தான் படையின் 14 டாங்கிகளை ஒரு மோதலில் அழித்தது. பல பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். 19 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், 44 பேர் காயமடைந்தனர். இந்தியாவுக்குச் சொந்தமான இரண்டு டாங்கிகள் அழிக்கப்பட்டன."
 
கரீப்பூர் போரில் இந்திய ராணுவத்தின் தலைவராக இருந்து பின்னர் பிரிகேடியர் பதவிக்கு வந்த பல்ராம் சிங் மேத்தா, இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், போர்க்களத்தில் இருந்த சக ராணுவத்தினரிடம் தமது அபாரமான தைரியத்தின் கதையைச் சொல்வதாக உறுதியளித்ததாகக் கூறியுள்ளார்.
 
இந்தப் போருக்குப் பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2015 ஆம் ஆண்டில், அவரது படைப் பிரிவின் 50-வது ஆண்டுநிறைவை முன்னிட்டு, அவர் ‘தி பர்னிங் சாஃபிஸ்’ என்ற நினைவுப் புத்தகத்தை எழுதினார். பிப்பா திரைப்படம் இந்த புத்தகத்தைத் தான் அடிப்படையாகக் கொண்டது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நற்றமிழ்ப் பாவலர் விருது ! பாராட்டு விழா !