Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்னிபத் திட்டம் திரும்பப் பெறப்படாது - முப்படைகள் விளக்கம்

அக்னிபத் திட்டம் திரும்பப் பெறப்படாது - முப்படைகள் விளக்கம்
, திங்கள், 20 ஜூன் 2022 (15:41 IST)
அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என்று ராணுவ விவகாரத்துறை கூடுதல் செயலாளர் அனில் பூரி தெரிவித்துள்ளார்.
 
இந்தத் திட்டம் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்தது. மேலும் சில இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டம் குறித்து முப்படைகளின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த திட்டம் குறித்து ராணுவ விவகாரங்கள் பிரிவின் கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி, கடற்படை துணை அட்மிரல் டி.கே.திரிபாதி, விமானப்படையின் ஏர் மார்ஷல் எஸ்.கே.ஜா ஆகியோர் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினர்.
 
முன்னதாக நாட்டில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், ஞாயிறன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது அலுவல்பூர்வ இல்லத்தில் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
 
இந்த சந்திப்பில், அவர்கள் குறிப்பிட்ட முக்கிய தகவல்கள் இதோ:
 
"ஆயுதப்படையில் ஒழுக்கமின்மைக்கு இடமில்லை. அக்னிபத் திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோர், தாங்கள் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடவில்லை என எழுத்துபூர்வ உறுதிமொழி அளிக்க வேண்டும். ஏதேனும் வழக்குகள் இருந்தால், அவர்களால் அக்னிபத் திட்டத்தில் இணைய முடியாது. 100% காவல்துறை சரிபார்ப்பு இல்லாமல் யாரும் இந்த திட்டத்தில் சேர முடியாது." என்று அனில் புரி கூறியுள்ளார்.
 
இத்தகைய பிரச்னைகள் ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், இளைஞர்கள் அரசு உடைமைகளை சேதப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
 
அடுத்த 4, 5 ஆண்டுகளில், 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையிலான ராணுவ வீரர்களை பணியமர்த்துவோம். பின்னர், இந்த எண்ணிக்கையை 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை உயர்த்துவோம் என்று அவர் தெரிவித்தார்.
 
"ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17,600 பேர் முப்படைகளில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெறுகிறார்கள். ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வார்கள் என்று யாரும் அவர்களிடம் கேட்கவில்லை." என்றார்.

நாட்டிற்காக உயிரை தியாகம் செய்யும் அக்னிவீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
 
சியாச்சின் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போதுள்ள ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகளை 'அக்னிவீரர்களுக்கு' வழங்கப்படும்.
 
விமானப்படையின் ஏர் மார்ஷல் எஸ்.கே.ஜா கூறுகையில், "இந்திய விமானப்படையில் அக்னிவீரர்களின் முதல் குழுவை பணிக்கு எடுக்கும் செயல்முறைகள் ஜூன் 24-ம் தேதி தொடங்கும். இது இணைய வழி முறை. ஒரு மாதம் கழித்து ஜூலை 24 முதல் கட்டம் பணிகள் தொடங்கும்." என்றார்.
 
மேலும் அவர் கூறுகையில், இதற்கான தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெரும். டிசம்பர் இறுதிக்குள் அக்னிவீரர்களின் முதல் குழு விமானப்படையில் சேர்க்கப்படும். டிசம்பர் 30-ஆம் தேதிக்கு முன் அந்த குழுவின் பயிற்சிகள் தொடங்கும்." என்றார்.
 
கடற்படை துணை அட்மிரல் டி.கே.திரிபாதி கூறுகையில், "நாங்கள் எங்களின் படையில் ஆட்சேர்ப்பு பணிகளை தொடங்கி விட்டோம். ஜூன் 25ம் இதுகுறித்து எங்களின் விளம்பரம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். ஒரு மாதத்திற்குள் ஆட்சேர்ப்பு பணிகள் தொடங்கும். எங்களின் முதல் அக்னிவீரர்கள் குழுவின் பயிற்சி நவம்பர் 21ம் தேதி தொடங்கும்," என்றார்.
 
இந்திய கடற்படையில் தற்போது வெவ்வெறு கடற்படை கப்பல்களில் பெண் அதிகாரிகள் 30 பேர் உள்ளனர். நாங்கள் அக்னிபத் திட்டம் மூலமும், பெண் படையினரையும் பணியில் அமர்த்தவுள்ளோம். அவர்கள் போர் கப்பல்களிலும் பணியமர்ந்தப்படுவார்கள் என்றார்.
 
இதுதவிர,  அக்னிபத் வீரர்களுக்கு வங்கிகளில் எளிய முறையில் கடன் பெறும் ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று அனில் புரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், "நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 21.5 வயது முதல் 25 வயது வரை உள்ள அக்னி வீரர்கள்  ராணுவத்தில் இருந்து வெளியேறுவார்கள். அவர்களுக்கு  ஓய்வூதிய தொகையாக ரூ. 11. 71 லட்சம் கிடைக்கும். அவர்களுக்கு வங்கிகளில் எளிதாக கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும். 
 
இதன் மூலம் அவர்கள் சொந்தமாக எந்த தொழிலையும் தொடங்கலாம்." என்றார். இந்த திட்டத்திற்கு இளைஞர்களுக்கு வாயப்பளிப்பது குறித்து அவர் பேசுகையில், "இந்திய ராணுவத்தில் இளம் வயதினருக்கும், அனுபவ வாய்ந்தவர்களுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை நீண்ட காலமாக கருதி வருகிறோம். இந்த புதிய ஆட்சேர்ப்புத் திட்டத்தின் மூலம் இது சாத்தியமாகும்," என்றார்.  
 
மேலும் அவர், "தொழில்நுட்பம் காலப்போக்கில் மாறியுள்ளது. நவீன போர்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்ட இளம் வீரர்கள் எங்களுக்குத் தேவைப்படுகின்றனர்.  ஏனெனில் தொழில்நுட்பம் பயன்பாடு இளைஞர்களுக்கு எளிதாக உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டெர்லைட் ஆலை விற்பனை அறிவிப்பால் கிடுகிடுவென சரிந்த வேதாந்தா பங்குகள்!