Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காணாமல் போன குழந்தையை மீட்க உதவிய ஆதார் அட்டை

காணாமல் போன குழந்தையை மீட்க உதவிய ஆதார் அட்டை
, செவ்வாய், 27 மார்ச் 2018 (13:14 IST)
பெற்றோர்கள் தேடி அலைந்த போதும் கிடைக்காத காணாமல் போன சி்றுவன். அந்த குடும்பத்தின் ஆதார் அட்டை மூலம் பெற்றோருடன் மீண்டும் சேர்ந்துள்ளான்.



வினோத்துக்கும், கீதாவுக்கும் பானிபத் நகரம் ஒரு போர்க்களத்திற்கு குறைந்தது இல்லை என்று தோன்றியது. விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது மகன் திடீரென்று காணமல் போய்விட்டான். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை நாள். ஆண்டு? 2015ஆக இருக்கலாம். ஐந்து வயது செளரப் விளையாடிக் கொண்டிருந்தபோது காணமல் போய்விட்டான்.

'அழுதுக் கொண்டே ரயில் நிலையம்வரை சென்றேன், எல்லா இடங்களிலும் தேடினேன். ஒரு வயதேயான என்னுடைய இளைய மகனை பக்கத்து வீட்டாரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு செளரப்பை தேடி அலைந்தேன். ஆனால், அவன் கிடைக்கவில்லை… என் கணவர் மாலை 6-7 மணிக்கு வேலையில் இருந்து வீட்டிற்கு திரும்பினார்' என்று அந்த நாள் நினைவுகளில் கீதாவின் கண்களில் நீர் துளிக்கிறது.நிரந்தரமான வேலை எதுவும் இல்லாத வினோத், சில சமயங்களில் பழக்கடை போடுவார். பல நாட்களில் தினக்கூலியாக வேலை பார்ப்பார். ஆனால் மகனைத் தேடும் முயற்சியில், ஹரியானா, டெல்லி என பல ஊர்களுக்கும் அலைந்தார்.

webdunia


"குருத்வாராக்கள், கோவில்கள், சாந்தி்னி செளக் என எல்லா இடங்களிலும் என் மகனைத் தேடினேன். ஆனால் செளரபை கண்டுபிடிக்க முடியவில்லை" என்று சொல்கிறார் வினோத். ஷட்டர் போடப்பட்ட கேரேஜ் அல்லது பழைய வீடு என்று எங்காவது தங்கிக் கொண்டு மகனை தேடியதாக சொல்கிறார் வினோத். தனது மகனை போன்று யாரவது ஒரு குழந்தையைப் பார்த்தாலும், கீதாவின் கண்கள் குளமாகிவிடுமாம்…குழந்தைகளின் நலனுக்காக பணிபுரியும் சலாம் பாலக் என்ற அமைப்பில் இருந்து வினோத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பு அவர்களின் நீண்ட நாள் தேடலை முடிவுக்கு கொண்டு வந்தது.

"செளரப் என்ற அந்த சிறுவனை பள்ளியில் சேர்ப்பதற்காக ஆதார் அட்டை தேவைப்பட்டது. அதற்காக எடுக்கப்பட்ட செளரபின் கைரேகைகள், பானிபத்தில் தயாரிக்கப்பட்ட ஆதார் அட்டை ஒன்றுடன் ஒத்துப்போவதாக தெரியவந்தது. அந்த அட்டையில் கொடுக்கப்பட்டிருந்த மொபைல் தொலைபேசி எண்ணில் அழைத்துப் பேசினோம். அவர்களிடம் விசாரித்தபோது, செளரப் என்ற சிறுவன் ஓராண்டாக காணவில்லை என்று தெரிந்துக் கொண்டோம்" என்கிறார் சலாம் பாலக் அமைப்பைச் சேர்ந்த நிர்மலா தேவி."ஆதார் அட்டையின் அடிப்படையில் ஒரு குழந்தையை அவர்கள் பெற்றோருடன் சேர்த்து வைப்பதில் எங்கள் அமைப்பு வெற்றியடைந்தது இதுவே முதல்முறை" என்று குறிப்பிடுகிறார் நிர்மலா தேவி.

webdunia

ஆதார் அட்டையின் தரவுகளைக் கொண்டு, சலாம் பாலக் அறக்கட்டளை கடந்த ஆண்டு ஏழு குழந்தைகளை பெற்றோருடன் சேர்த்து வைத்துள்ளது.

தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் 'சைல்ட் லைன் ஹோம்' என்ற திட்டத்தின்கீழ் அடைக்கலம் கொடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் பஞ்சாப், ஹரியானா, உத்தராகண்ட், உத்திரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்தவர்கள். சலாம் பாலக் அமைப்பின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் துபேவின் கருத்துப்படி, '2017ஆம் ஆண்டில் எங்களிடம் வந்த 927 சிறுவர்களில் 678 பேரை அவர்கள் குடும்பத்தினருடம் சேர்ப்பதில் வெற்றியடைந்துவிட்டோம். பணியாளர்களின் நெட்வொர்க், அவர்களின் புலன்விசாரணை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் உதவியால் இது சாத்தியமானது'.

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் சஞ்சய் துபே, 'நிர்மலா உங்களிடம் சொன்னதுபோல், ஆதார் அட்டையின் உதவியுடன் ஏழு குழந்தைகளை அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைத்தோம். பிற குழந்தைகளை அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைத்ததற்கு பணியாளர்களின் பல்வேறு முயற்சிகளே காரணம். ஆதார் அட்டை இல்லாத சமயத்திலும் இந்த பணிகளை செய்து வந்திருக்கிறோம்.

"இப்போது பணிச்சுமை சற்றே குறைந்திருக்கிறது. குறிப்பாக, தகவல்களை சரியாக சொல்லும் அளவு வளராத சிறார்களின் விஷயத்தில், அவர்களுக்கு ஆதார் அட்டை ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தால் அது உதவியானதாக இருக்கும்." ஆதார் அட்டையின் பயன்பாடு முழுமையாக இருக்க வேண்டுமா அல்லது அதன் பயன்பாடு வரையறுக்கப்பட வேண்டுமா என்பது பற்றி மக்களிடையே விவாதங்கள் எழுந்துள்ளன.

ஆனால், ஒருவரின் கைரேகையைப் போன்று மற்றொருவரின் கைரேகை இருக்காது என்பதும், மொபைல் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றமும், குடும்பத்திலிருந்து பிரிந்த செளரப் மீண்டும் பெற்றோருடன் இணைய காரணமாக இருந்திருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணல் மாஃபியா செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் லாரி ஏற்றி கொலை