Publish Date: Sat, 30 Jun 2018 (15:50 IST)
Updated Date: Sat, 30 Jun 2018 (15:52 IST)
“எல்லாம் செய்துவிட்டேன், ஆனாலும் வெற்றி கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கிறது” என்பவர்கள் இங்கே வாருங்கள். சத்குரு சொல்லும் இந்த 5 வழிமுறைகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டால் உங்கள் வாழ்க்கையில் இனி வெற்றி வெற்றி வெற்றி மட்டும்தான். வெற்றியைத் தேடுபவர்களுக்குப் புதிய பொன்மொழிகள் இதோ.
1. கைகளை நம்புவோம்! கைரேகையை அல்ல...
சத்குரு:
சில சமயங்களில் எதேச்சையாக, அதிர்ஷ்டவசமாக, சில விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக நிகழ்ந்துவிடலாம். அப்படிக் காற்று உங்கள் பக்கம் வீசும் சமயத்திற்காக நீங்கள் காத்திருந்தால், நல்ல விஷயங்கள் உங்கள் கல்லறையில்தான் நடக்கும், ஏனென்றால் அச்சமயம் வராமல் கூட போய்விடலாம்.
உங்களுக்கு தெரியுமா? கோடான கோடி தடவை ஒரு திடமான சுவரின் ஊடே நடந்து அதைக் கடக்க முயன்றால், அதில் ஒரு முறை நீங்கள் கடந்துவிட முடியுமென்று குவான்டம் கோட்பாடு (Quantum Theory) கூட சொல்கிறது. அதில் சிறிய சிக்கல் அந்த கோடான கோடி தடவையைத் தொடும்முன் உங்கள் மண்டையோடு உடைந்திருக்கும்.
நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி வாழும்போது, நீங்கள் பயத்திலும் பதற்றத்திலும் வாழ்கிறீர்கள். நீங்கள் தெளிவான நோக்கத்துடனும் திறமையுடனும் வாழும்போது உங்களுக்கு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், உங்களுக்கு நடப்பவை மேல் உங்களுக்கு ஆளுமை இருக்கும். அதுதான் ஸ்திரமான வாழ்க்கை.