Publish Date: Sat, 18 Mar 2017 (14:38 IST)
Updated Date: Sat, 18 Mar 2017 (14:43 IST)
2015 பொதுத்தேர்தலிலும் 2016 இடைத்தேர்தலிலும் ஜெயலலிதா இங்கு போட்டியிட்ட போது அவருக்கு மாற்று வேட்பாளராக என்னைத் தான் நிறுத்தினார் என்று ஆர்.கே.நகர் ஓ.பி.எஸ். அணி வேட்பாளரான் மதுசூதனன் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆர்.கே.நகர். தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வேட்புமனு தாக்கல் வரும் 16ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதியுடன் முடிகிறது. இத்தேர்தலில் அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் அணிகள் தவிர, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் தனியாக போட்டியிடவுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக மதுசூதனன் போட்டியிடுகிறார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், ”ஜெயலலிதா என் மீது எப்போதும் நல்லெண்ணம் வைத்திருந்தார். அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கினேன்.
ஜெயலலிதாவின் ஆசியும் நல்லெண்ணமும் எனக்கு எப்போதும் உண்டு. அதை நம்பித்தான் தேர்தல் களத்தில் நிற்கிறேன். 2015 பொதுத்தேர்தலிலும் 2016 இடைத்தேர்தலிலும் ஜெயலலிதா இங்கு போட்டியிட்ட போது அவருக்கு மாற்று வேட்பாளராக என்னைத் தான் நிறுத்தினார். அவரது இந்த நம்பிக்கையே என்னை வெற்றி பெறச் செய்யும்” என்று கூறியுள்ளார்.