Publish Date: Wed, 01 Nov 2017 (10:41 IST)
Updated Date: Wed, 01 Nov 2017 (10:45 IST)
தனக்கு எதிராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், டிடிவி தினகரனும் ஒன்றாக இணைந்து செயல்பட வாய்ப்பிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருதுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இரு அணிகளும் ஒன்றாக இணைந்து விட்டாலும், தனக்கும், தன்னுடைய ஆதரவாளர்களுக்கும் சரியாக அங்கீகாரம் மற்றும் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என ஓ.பி.எஸ் அதிருப்தியில் இருப்பதாக இதற்கு முன்பே செய்திகள் வெளியானது.
இதன் விளைவாக சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் ஓ.பி.எஸ். அப்போது, தன்னை பற்றியே பிரதமரிடம் ஓ.பி.எஸ் புகார் கூறியிருக்கிறார் என கருதுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அந்நிலையில், அதிருப்தியிலிருக்கும் ஓ.பி.எஸ்-ஐ தினகரன் பக்கம் இழுக்கும் முயற்சிகளும் நடந்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
மேலும், எடப்பாடிக்கு எதிராக தினகரனும், ஓ.பி.எஸ்-ஸும் ஒரு அணியில் இணைய வாய்ப்பிருக்கிறது என உளவுத்துறை அளித்த அறிக்கையும் எடப்பாடிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்நிலையில்தான், தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் மூன்று பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு டெல்லியில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தினகரன் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பி.எஸ் அணி, தினகரனுக்கு எதிராகவே செயல்படுகிறது என உணர வைக்க எடப்பாடி கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்த காட்சி அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது.