Publish Date: Fri, 18 Aug 2017 (00:57 IST)
Updated Date: Fri, 18 Aug 2017 (00:21 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடான 'வேதா இல்லம்' நினைவிடம் ஆக்கப்படும் என்றும் இந்த நினைவிடம் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு ஓபிஎஸ் அணி உள்பட அனைத்து அதிமுகவினர்களும் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்புக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. ஜெ. தீபா அணியின் தலைமை செய்தித் தொடர்பாளர் தலைமை செய்தித் தொடர்பாளர் பசும்பொன்பாண்டியன் பசும்பொன்பாண்டியன் கூறியதாவது:
"ஜெயலலிதா மறைந்து ஒன்பது மாதங்களாகின்றன. அவரது பூத உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்கூட நினைவிடம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தீபாவை பழிவாங்க, போயஸ் கார்டன் வீட்டை அரசுடைமையாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கான அனுமதியை தீபாவிடம் பெறவில்லை. போயஸ் கார்டன் வீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்துள்ளோம். முதல்வரின் அறிவிப்புக்கு உடனடியாக நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கவுள்ளோம்.
ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது கண்கெட்டப்பிறகு சூர்யநமஸ்காரம் போன்றது. கண்துடைப்புக்காக விசாரணை கமிஷன் அமைக்கப்படக்கூடாது. இந்த விசாரணை வளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள், சசிகலா குடும்பத்தினர் என சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரிக்க வேண்டும். விசாரணை கமிஷன் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்" என்றார்.