Publish Date: Thu, 17 Aug 2017 (17:20 IST)
Updated Date: Thu, 17 Aug 2017 (17:31 IST)
இரட்டை இலை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தீபா அணியினர் டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் புது மனு ஒன்றை அளித்துள்ளனர்.
ஓ.பி.எஸ் அணியும், முதல்வர் எடப்பாடி அணியும் ஏற்கனவே இரட்டை இலை சின்னத்திற்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பில் 3 லட்சம் பிரமாணப் பத்திரங்களும், ஓபிஎஸ் தரப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இரட்டை இலை சின்னத்தை இருதரப்பினரும் கேட்க தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. அண்மையில் தீபா அணியினர் சார்ப்பில் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது புது மனு ஒன்றை தீபா அணியினர் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளனர்.
தீபா அணியின் தலைமை செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன், கடலூர் வெங்கட் ஆகியோர் டெல்லியில் இன்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் அணியினர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். நாங்கள் சமர்பித்துள்ள ஆவணங்களே உண்மையானவை எனவே இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.