Publish Date: Tue, 23 Mar 2021 (21:03 IST)
Updated Date: Tue, 23 Mar 2021 (21:11 IST)
தமிழகத்தின் தங்கத்தாரகை, மகளிரின் ஆதர்ஷமாக வாழ்ந்த, புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் படமாக, உருவாகும் தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு, இன்று படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய நடிகர், இயக்குநர் சமுத்திரகனி...
மிகப்பெரும் ஜாம்பவான்கள் பங்கு கொண்டிருக்கும் படத்தில் நானும் இருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இயக்குநர் விஜய்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். 1000 பக்கங்கள் கொண்ட "ஆர் எம் வி ஒரு தொண்டர்" எனும் புத்தகத்தை படிக்க சொன்னார்.
படித்து வியந்து விட்டேன். இப்படியும் மனிதர்கள் இருந்திருக்கிறார்களா, என ஆச்சர்யகரமாக இருந்தது. என்னால் அவரைப்போல் நடிக்க முடியுமா என பயமாக இருந்தது. இயக்குநர் விஜய் ஊக்கம் தந்து நடிக்க வைத்தார். எம் ஜி ஆரை நான் படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படத்தில் 15 நாள் அவர் கூடவே இருந்தது போல் இருந்தது.
நண்பர் அரவிந்த்சாமி அவரை தத்ரூபமாக திரையில் கொண்டுவந்துள்ளார். சிறு சிறு விசயங்களிலும் மெனெக்கெட்டு உழைத்தார். கங்கனா ஜெயலலிதா அம்மாவின் ஆவி புகுந்தது போல் செய்திருக்கிறார். நிச்சயம் அவரது உழைப்பு பாராட்டு பெறும். நான் இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறேன் என்றால், அதற்கு இயக்குநர் விஜய் தான் காரணம். அவர் துளித்துளியாக படத்தை செதுக்கியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.