திங்களன்று தொடங்கும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களிலிருந்து ஸ்பெயின் நட்சத்திர வீரரும் உலகின் நம்பர் 1 வீரருமான ரஃபேல் நடால் முழங்கால் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு விம்பிள்டன் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரரை 5 செட்களில் வீழ்த்திய நடால், இந்த முறை விம்பிள்டன் போன்ற மிகப்பெரிய தொடரிலிருந்து விலகுவது கடினமான முடிவு என்றாலும், மன ரீதியாக, உடல் ரீதியாக இவ்வளவு பெரிய தொடரை அணுக தான் தயாராக இல்லை என்றார்.
இதற்கு முன் நடைபெற்ற கண்காட்ச்சிப் போட்டியில் லெய்டன் ஹூவிட்டுடன் தோல்வி தழுவியதுடன், அடுத்த ஆட்டத்தில் சுவிஸ் வீரர் வார்வின்காவிடமும் தோல்வி தழுவினார்.
காயத்தினால் இவர் மைதானத்தில் சரியாக நகர முடியவில்லை என்று இந்த ஆட்டங்களில் வெளிப்படையாக தெரிந்தது.
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் ராபின் சோடர்லிங்கிடம் இவர் தோல்வியடைந்த போதும் காயத்தினால் சையாக விளையாட முடியவில்லை என்பது தெரிந்தது.
கோரான் இவானோவிச்சிற்கு பிறகு கடந்த ஆண்டு சாம்பியன் அடுத்த ஆண்டு விம்பிள்டனில் கலந்து கொள்ள முடியாத நிலை நடாலுக்கு ஏற்பட்டுள்ளது.