Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷாட் பிட்ச் பந்துகளில் ஓரளவுக்கு தேறியுள்ளேன் - ரெய்னா

ஷாட் பிட்ச் பந்துகளில்  ஓரளவுக்கு தேறியுள்ளேன் - ரெய்னா
, செவ்வாய், 21 ஜூன் 2011 (13:55 IST)
FILE
பவுன்சர் உள்ளிட்ட ஷாட் பிட்ச் பந்துகளைக் கண்டு இனி அஞ்சப்போவதில்லை. அதனை எதிர்கொள்ளும் விதத்தில் ஓரளவுக்கு இப்போது தேறியுள்ளேன் என்று இந்திய அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

நேற்று இந்திய அணி சபைனா பார்க்கில் 85/6 என்று சரியும் அபாயத்தில் இருந்தபோது ஹர்பஜனுடன் இணைந்து 120 பந்துகளில் இருவரும் 100 ரன்களைக் குவித்து எதிர்தாக்குதல் நடத்தினர். ரெய்னா 115 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 82 ரன்களை எடுத்து கடைசியாக ஆட்டமிழந்தார்.

"நேற்று என்னுடைய திட்டம் நேராக விளையாடுவது என்பதே. எனது சிந்தனையில் தெளிவாக இருந்தேன் பொறுமையைக் கடைபிடிப்பதே சிறந்தது என்று முடிவு செய்தேன்.

ஷாட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வது பற்றி பயிற்சியாளர் டன்கன் பிளெட்சருடன் நிறைய விவாதித்தேன், ராகுல் திராவிடிடமும் தோனியிடமும் பேசினேன் பயிற்சிகள் மேற்கொண்டேன். இப்போது ஓரளவுக்கு தேறியுள்ளேன்.

இப்போது என் சிந்தனை தெளிவாக உள்ளது அவர்கள் பந்தை எங்கு பிட்ச் செய்கிறார்கள் என்று கவலையில்லை, நான் அடித்து ஆடுவது என்ற முயற்சியில் இருந்தேன். மேலும் நேராக ஆடுவது என்று முடிவெடுத்தேன்.

கடைசி 3 ஒருநாள் போட்டிகளில் நான் ரன் எடுக்கவில்லை, அதனை இந்த இன்னிங்ஸ் மூலம் ஈடுகட்ட விரும்பினேன்." என்று கூறினார் ரெய்னா.

லெக் ஸ்பின்னர் பிஷூ, லஷ்மண், திராவிட், தோனி விக்கெட்டுகளைச் சாய்த்து நிலைகுலையச் செய்தபோதிலும் ரெய்னா அவரது ஓவர்களில் மட்டும் 40 ரன்களை 8 பவுண்டரிகள் உட்பட வெளுத்துக் கட்டினார்.

"இடது கை பேட்ஸ்மென்களுக்குப் பந்து வீச அவர் லேசாக திணறுகிறார் என்று கருதுகிறேன். நான் கவர் திசையில் அடிப்பதற்காக அவர் பந்தை நன்றாகத் தூக்கி வீசினார் ஆனால் நான் நேராக ஆடினேன்.

இரண்டாம் நாள் மேற்கிந்திய வீரர்களுக்கு கஷ்ட காலம் காத்திருக்கிறது. ஆடுகளம் சீரற்றதாக உள்ளது, இதில் நமது ஸ்பின்னர்களை எதிர்கொள்வது கடினம். அவர்களில் ஒருசிலருக்கு சுழற்பந்தை எதிர்கொள்வதில் அதிக சிரமம் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் துவக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் இந்த ஆட்டக்களத்தில் அவர்களுக்குத் தகுந்த நெருக்கடியை அளிப்போம்" என்று கூறினார் ரெய்னா.

Share this Story:

Follow Webdunia tamil