Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2011 குரு பெயர்ச்சி பலன்கள் : மீனம்

2011 குரு பெயர்ச்சி பலன்கள் : மீனம்
, வியாழன், 5 மே 2011 (17:46 IST)
எதையும் திட்டமிட்டு செய்பவர்களே! இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்ந்து உங்களுக்கு ஏகப்பட்ட மன உளைச்சலை தந்து, எதிலும் ஈடுபாடு இல்லாமல் செய்தாரே! எங்கு சென்றாலும் எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் தானே மிஞ்சியது செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினாரே! குடும்பத்தினர் உங்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் புறக்கணித்தார்களே! இப்படி பலவகையிலும் உங்களை அலைக்கழித்த குருபகவான் 9.5.2011 முதல் 16.5.2011 முடிய உங்கள் ராசிக்கு தனவீடான 2-ம் வீட்டில் அமர்வதால் அடிமனசில் இருந்த போராட்டம் நீங்கும். சந்தேகத்தால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். அடுக்கடுக்காக செலவுகள் வந்து அலைக்கழித்ததே! இனி எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும்.

குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் நிம்மதியுண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் தேடி வருவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சோர்ந்த முகம் மலரும். வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். அநாவசியமாகப் பேசி நல்ல நண்பர்களையெல்லாம் இழந்தீர்களே, இனி நிதானித்துப் பேசுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த உரசல் போக்கு நீங்கும். இனி பாசமாகப் பேசுவார்கள். பெரிய நோயெல்லாம் இருப்பது போல பயந்தீர்களே! மருத்துவச் செலவுகளும் அதிகமானதே! இனி ஆரோக்யம் பற்றிய பயம் நீங்கும். வீட்டில் பேச ஆரம்பித்தாலே பிரச்னைகள் வெடித்ததே! இனி இதமாகப் பேசி சாதித்துக் காட்டுவீர்கள்.

குரு பகவான் ஆறாவது வீட்டை பார்ப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அலைச்சல்கள் குறையும். குருபகவான் எட்டாவது வீட்டை பார்ப்பதால் எதிர்பாராத வகையில் பணம் வரும். திட்டமிட்டபடி அயல்நாடுப் பயணங்கள் கூடி வரும். விசா பெறுவதில் தடையிருக்காது. பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமையுடன் நெருக்கமாக இருப்பீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 14.12.2011 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டங்களில் உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு மூலம் பணம் வரும். வேலைக் கிடைக்கும். தங்கம் சேரும். மகளுக்கு வரன் அமையும். அக்கம்-பக்கம் வீட்டாருடன், உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். உயர்கல்வியில் தேர்ச்சி உண்டு. போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்கள் உதவுவார்கள். சொத்துப் பிரச்னை தீரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள்.

2.5.2012 முதல் 16.5.2012 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.

வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். பிரச்னை தந்த பங்குதாரர்ககளை நீக்குவீர்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நட்டப்படாமல், சந்தை நிலவரத்தை உற்று நோக்கி புது முதலீடு செய்யுங்கள். லாபம் கணிசமாக உயரும். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மே, ஜூன், ஆகஸ்டு, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். ஹோட்டல், பைனான்ஸ், கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், கமிசன் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் தேடி வரும் வாய்ப்புள்ளது.

உத்தியோகத்தில் வேலை நிரந்தரமாகும். எதற்கெடுத்தாலும் உங்களையே குற்றம் சொல்லிக் கொண்டிருந்த மேலதிகாரி இனி பணிந்துபோவார். சகஊழியர்கள் உங்களை ஏளனப்படுத்திப் பேசினார்களே! இனி உங்களை மதிப்பார்கள். பதவியுயர்வு சம்பந்தப்பட்ட வழக்கில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். ஜூன், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வேறு சில வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். கணினி துறையினர் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவார்கள்.

கன்னிப்பெண்களே! தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இனி கைகூடும். பெற்றோரின் ஆதரவு உண்டு. காதல் தோல்வியில் கலங்கி நின்றீர்களே! அதிலிருந்து மீள்வீர்கள். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்களே! விளையாட்டை குறையுங்கள். உயர்கல்வியில் கூடுதல் அக்கறை எடுக்கா விட்டால் பின்னர் வருத்தப்பட வேண்டியது வரும். ஆனால் விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். கலைஞர்களே! தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு தேடி வரும். பழைய சம்பளப் பிரச்சனை தீரும்.

இந்த குரு மாற்றம் இடியாப்ப சிக்கல்களிலிருந்து உங்களை விடுவிப்பதுடன் எங்கும் எதிலும் சாதிக்கும் வல்லமையை அள்ளித் தரும்.

பரிகாரம்:

திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவலில் வீற்றிருக்கும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மையையும், ஸ்ரீஜம்புகேஸ்வரரையும் மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். கால் இழந்தவர்களுக்கு உதவுங்கள். நினைத்தது நிறைவேறும்.

Share this Story:

Follow Webdunia tamil