Publish Date: Sun, 19 Jul 2020 (18:08 IST)
Updated Date: Sun, 19 Jul 2020 (18:10 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஆறாம் கட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவில் ஜூலை மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் முழு ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே
இதனை அடுத்து சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் இன்று தளர்வூகள் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய முழு ஊரடங்கு நாளில் மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தது என்று சென்னை காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்
சென்னையில் இன்று அனைத்து முக்கிய சாலைகளும் வெறிச்சோடி இருந்தது என்பதும், மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட இன்று வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்து இருப்பது பெரும் ஆச்சரியமாக உள்ளது. சென்னை மக்கள் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து இருப்பது ஆச்சரியத்தை தருகிறது என்றாலும் நேற்றே சிக்கன் மட்டன் உள்ளிட்டவை வாங்க மக்கள் விடிய விடிய பொது இடத்தில் கூடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது