Publish Date: Tue, 20 Sep 2016 (05:36 IST)
Updated Date: Tue, 20 Sep 2016 (05:48 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் மின்கம்பியை கடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து, அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை வரையில் ராம்குமாரின் உடலைப் பெறுவதற்கு ராம்குமாரின் பெற்றோர், உறவினர்கள் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை. அவர்கள் வந்து அடையாளம் காட்டிய பின்னர்தான் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் ராம்ராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதற்கிடையே, இறந்தவரின் உடலை யாராவது 5 பேர் அடையாளம் காட்டினால் போதுமானது. உறவினர்கள்தான் வர வேண்டும் என்பதில்லை' என்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயண பாபு கூறியுள்ளார்.
இந்நிலையில், பிரேதப் பரிசோதனை நடத்தலாம் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு நேற்று மாலை 5.40 மணியளவில்தான் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அதிகாரிகளுக்கு கிடைத்தது.
விதிகளின்படி மாலை 6 மணிக்கு மேல் பிரேதப் பரிசோதனை நடைபெறாது என்பதால், இன்று காலை 10 மணியளவில் ராம்குமாருக்கு பிரேதப் பரிசோதனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.