Publish Date: Mon, 02 Dec 2019 (22:00 IST)
Updated Date: Mon, 02 Dec 2019 (22:01 IST)
ஒரு காலத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களையும் தொண்டர்களையும் நம்பி தேர்தல் களத்தில் இறங்கியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கார்ப்பரேட் கம்பெனிகள் தான் ஒரு கட்சியின் வெற்றியை நிர்ணயிக்கிறது.
அந்த வகையில் மத்தியில் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு உதவிய பிரசாந்த் கிஷோர், தற்போது முதன் முதலாக தமிழ்நாட்டில் காலடி வைத்துள்ளார்
பிரசாந்த் கிஷோரின் கார்ப்பரேட் நிறுவனத்துடன் இணைந்து 2021 ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்க பல கட்சிகள் முயற்சி செய்தன. அதிமுக, கமல்ஹாசன், ரஜினிகாந்த், திமுக உள்ளிட்ட கட்சிகள் பிரசாந்த் கிஷோர் அவர்களுடன் தொடர்பு கொண்டு டீலிங் நடத்திக் கொண்டிருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்தன
இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் செய்தியின்படி திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் வரும் 2021 தேர்தலில் பணிபுரிய ஒப்புக்கொண்டதாகவும், இதற்காக பல கோடி ரூபாய் கட்டணத்தை அவர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது
50 ஆண்டு பழமையான ஒரு கட்சி, அடிமட்ட தொண்டர்கள் வலுவாக இருக்கும் ஒரு கட்சி, உள்கட்டமைப்பு உள்பட பல விதங்களிலும் அடித்தளத்தை கொண்டுள்ள ஒரு கட்சி எதற்காக பிரசாந்த் கிஷோரை நம்பி களத்தில் இறங்குகிறது என்று திமுக தொண்டர்கள் பலர் ஆச்சரியப்படுகின்றனர்
மேலும் தமிழக ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்கள் அனைத்துமே திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் போது இத்தனை கோடி ரூபாய் செலவு செய்து பிரசாந்த் கிஷோரை அழைத்து வருவது தேவைதானா? என்ற எண்ணமும் திமுக தொண்டர்களிடையே உள்ளது
இருப்பினும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நடவடிக்கையே வித்தியாசமாக இருக்கும் என்பதால் திமுக தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது