எம்எல்ஏக்கள் நீக்கம் செல்லாது?: நீதிமன்ற உத்தரவால் எடப்பாடிக்கு சிக்கல்!
எம்எல்ஏக்கள் நீக்கம் செல்லாது?: நீதிமன்ற உத்தரவால் எடப்பாடிக்கு சிக்கல்!
Publish Date: Tue, 19 Sep 2017 (12:09 IST)
Updated Date: Tue, 19 Sep 2017 (12:13 IST)
தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் நேற்று சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்த தகுதி நீக்கம் செய்தார். இது தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வரம்பி மீறி சரசியல் சாசன அமர்வு பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டிருப்பதாக பலரும் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த எம்எல்ஏக்கள் நீக்கம் செல்லாது என நீதிமன்றத்தால் அறிவிக்கப்படலாம் என பலரும் கணிக்கின்றனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருந்த எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது போல, கடந்த 2011-ஆம் ஆண்டு கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது நம்பிக்கை இல்லை என்று பாஜக மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் 13 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
அவர்களும் அப்போது கர்நாடக சட்டமன்ற சபாநாயகரால் எம்எல்ஏக்கள் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். ஆனால் அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அந்த 13 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என உத்தரவிட்டது.
அந்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பில், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், ஒன்று அந்த சட்டமன்ற உறுப்பினர் எந்தக் கட்சியின் சின்னத்தில் ஜெயித்தாரோ, அந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். மற்றொன்று கட்சியின் கொறடா உத்தரவைச் சட்டமன்றத்தில் மீறி செயல்பட்டிருக்க வேண்டும். இந்த காரணங்கள் பொருந்தாமல் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததால் அவர்கள் மீதான நடவடிக்கை செல்லாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
தற்போது உள்ள விவகாரமும் இதே எடியூரப்பா விவகாரமும் ஒரே மாதிரி தான். எடியூரப்பாவுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தில் இடம்பெற்ற அதே வாசகங்களை தான் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் நீதிமன்றத்தை நாடியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சாதகமாக அவர்களது எம்எல்ஏக்கள் பதவியை பறித்தது செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.