Publish Date: Sat, 05 Aug 2017 (12:20 IST)
Updated Date: Sat, 05 Aug 2017 (12:22 IST)
அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நேற்று சிலரை அதிமுகவின் நிர்வாகிகளாக நியமித்தது செல்லாது என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்கள் பொறுமையாக இருப்பேன் என தினகரன் கூறிய கெடு நேற்றோடு முடிவடைந்தது. இதையடுத்து அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதிமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.
அதாவது, அமைப்பு செயலாளர்களாக கு.ப. கிருஷ்ணன், ஜக்கையன், மேலூர் சாமி ஆகியோரும், கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக நாஞ்சில் சம்பத் மற்றும் இளவரசன் ஆகியோரும், அமைப்பு செயலாளர்களாக பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இதுபற்றி இன்று காலை செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜெயக்குமார் “தினகரனுக்கு அளிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் பதவியே கேள்விக்குறியாக இருக்கும்போது, அவர் அறிவித்த புதிய நிர்வாகிகள் பட்டியலும் கேள்விக்குறியே” என கூறினார்.
அதேபோல், டிடிவி தினகரன் தனக்கு அளித்த பதவிக்கும், தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என ஸ்ரீ பெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி மற்றும் பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளனர்.