Publish Date: Mon, 04 Sep 2017 (16:23 IST)
Updated Date: Mon, 04 Sep 2017 (17:22 IST)
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதாவின் தற்கொலை மரணம் தமிழகத்தையே அழ வைத்தது. ஆனால் அவரது மரணம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசினார் டாக்டர் கிருஷ்ணசாமி.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு அவரது தற்கொலைக்கு காரணமில்லை. வேறு காரணங்களுக்காக அனிதா தற்கொலை செய்திருக்கலாம். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருந்தார்.
இவரது இந்த கருத்துக்களுக்கு பலரும் கண்டன தெரிவித்தனர். இதனையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தனது சமூக வலைதள பக்கத்தில் கிருஷ்ணசாமி குறித்து பதிவு ஒன்றை செய்திருந்தார்.
அதில் கிருஷ்ணசாமி தனது மகள் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்ததால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து புறவாசல் வழியாக மருத்துவப்படிப்புக்கான சீட்டை பெற்றதை அம்பலப்படுத்தினார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவ கிருஷ்ணசாமி குறித்து பாலபாரதி பதிவிட்ட அந்த பதிவை நீக்கியதாக கூறப்பட்டது.
ஆனால் தான் பதிவை நிக்கவில்லை என்பதை மற்றொரு பதிவு மூலம் விளக்கியுள்ளார். மேலும் கிருஷ்ணசாமியை அடக்கிவாசிக்க சொல்லி எச்சரித்துள்ளார். பாலபாரதி தனது பதிவில், டாக்டர் கிருஷ்ணசாமி குறித்த என் பதிவை நான் நீக்கிவிட்டதாக வதந்தி பரப்புகின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. வானமே இடிந்து விழுந்தாலும் நீக்கமாட்டேன். உள்ளே இருக்கும் உளவுத்துறைக்கும் மற்றவர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன், கிருஷ்ணசாமியை அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள் என கூறியுள்ளார்.