Publish Date: Thu, 04 Jun 2020 (13:32 IST)
Updated Date: Thu, 04 Jun 2020 (13:33 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக ஐந்து கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தமிழகம் முழுவதிலும் தற்போதைய நிலவரப்படி 25,872 ஆக உள்ளது. இதில் தலைநகரான சென்னையில் மட்டும் 17,598 பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில் சென்னை நிலவரம் குறித்து பேசியுள்ள கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் சென்னையில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைவதாக தெரிவித்துள்ளார். மக்கள் தொடர்ந்து மாஸ்க் அணிந்து வந்ததால் பரவல் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்தியாவில் இறப்பு சதவீதத்தை குறைக்க வேண்டும் என்றும், மக்கள் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மாஸ்க் அணிவதை தொடர்ந்து பின்பற்றினால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.