Publish Date: Thu, 11 Jan 2018 (15:02 IST)
Updated Date: Thu, 11 Jan 2018 (15:07 IST)
அன்றாட நம் வாழ்க்கையில் பயணங்கள் இன்றியமையாதது. அப்படி பயணங்களில் பல விளம்பரங்கள், சுவரொட்டிகள், அறிவிப்புகளை பார்ப்போம். அவற்றில் காணவில்லை என்ற பல அறிவிப்பு சுவரொட்டிகளை அனைவரும் பார்த்திருப்போம்.
சின்ன குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் வரை பலரையும் காணவில்லை என பல விளம்பரங்கள் நம் கண்களை கடந்து சென்றிருக்கும். அப்படி ஒரு முறை நம் கண்ணில் சிக்கியது தான் இந்த சுவரொட்டி.
பூனையை காணவில்லை என அறிவிப்பு, அதிலும் அதனை கண்டுபிடித்து தருபவருக்கு ரூபாய் ஐந்தாயிரம் சன்மானம். இந்த சுவரொட்டி நம்மை ரசிக்க மட்டுமில்லாமல் சிந்திக்கவும் வைத்தது. அருகில் இருப்பவருக்கு என்ன ஆனால் என்ன என்பதை கூட சிந்திக்காமல் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றிகொண்டு இருக்கும் இந்த அவரசமான உலகில் பூனையை காணவில்லை என ஒருவர் சுவரொட்டி ஒட்டி தேடுகிறார் என்றால் அது பாராட்டுக்குறியதே.
மாம்பலம் ஹைரோடு, தி.நகர் - இருசக்கர வாகன சுரங்கப்பாதை அருகே வளர்க்கப்பட்டு வந்த பூனையை காணவில்லை. கண்டு பிடித்து தருபவர்களுக்கு ரூ.5000 சன்மானமாக வழங்கப்படும் என அந்த சுவரொட்டியில் கூறப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு அவரது மொபைல் எண்ணையும் குறிப்பிட்டுள்ளார்.