Publish Date: Wed, 24 Jul 2019 (14:34 IST)
Updated Date: Wed, 24 Jul 2019 (14:36 IST)
காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் அத்திவரதரைக் காண பக்தர்கள் வரவு அதிகமாகிக் கொண்டே போவதால் அவர்களுக்குத் துணை ராணுவப் பாதுகாப்பு வழங்க வேண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து குவிந்து கொண்டு இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பக்தர்கள் முறையாக தரிசனம் செய்ய தமிழக அரசு முறையானப் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. அங்கு குவியும் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து ரமேஷ் எனும் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில் ‘அத்திவரதரை காணவரும் பக்தர்களுக்குத் தமிழக அரசு சரியான பாதுகாப்பு வழங்கவில்லை. படுத்த நிலையில் உள்ள அத்திவரதர் அடுத்த சில நாட்களில் நின்ற நிலைக்கு மாறப்போகிறார். அதனால் பக்தர்களின் கூட்டம் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை ராணுவத்தை வரவழைத்து அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.