Publish Date: Wed, 18 Sep 2024 (11:54 IST)
Updated Date: Wed, 18 Sep 2024 (11:56 IST)
மருத்துவக்கல்வி இயக்குனரகம் தெரிவித்த தகவலின் படி, எம்பிபிஎஸ் (MBBS) அல்லது பிடிஎஸ் (BDS) படிப்புகளில் இடம் பெற்று, அனுமதிக்கப்பட்ட காலவரையறைக்கு பிறகு படிப்பை விட்டு விலகினால், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 9,050 எம்பிபிஎஸ் இடங்களும், 2,200 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. கலந்தாய்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கியது.
முதற்கட்ட கலந்தாய்வில் எம்பிபிஎஸ் படிப்பில் 1,423 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 1,566 இடங்களும் காலியாக இருந்தன. இதையடுத்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 14ஆம் தேதி முடிவடைந்த நிலையில் நாளை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் செப்டம்பர் 26க்குள் தேர்வுசெய்த கல்லூரியில் சேர வேண்டும்.
இந்த நிலையில் மருத்துவக்கல்வி அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் இடம் பெற்ற மாணவர்கள், விருப்பமின்றி கல்லூரியில் இருந்து விலக விரும்பினால், குறிப்பிட்ட காலத்துக்குள் அதைச் செய்யலாம். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு விலகினால், ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். மூன்றாம் மற்றும் இறுதி சுற்றுகளிலும் இதே விதிமுறைகள் செயல்படும், மேலும் கல்விக்கட்டணம் மற்றும் வைப்புத் தொகை திருப்பித் தரப்படமாட்டாது."
மாணவர்கள் இடம் தேர்வு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும், எனவே காலி இடங்களை தவிர்க்கவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.