வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வான அனைவருக்கும் 10 நாட்களுக்குள் பணி நியமன ஆணையை அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலியாக உள்ள வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்தி, இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வி.ஏ.ஓ.க்களுக்கு பணி நியமன ஆணைகள் அனுப்பப்படவில்லை.
இந்த நிலையில் பணி நியமனம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வி.ஏ.ஓ. பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 4 வாரங்களுக்குள் பணி நியமன ஆணைகளை அனுப்ப வேண்டும் என்று நீதிபதி கே.சுகுணா கடந்த டிசம்பர் 23ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால் அந்த காலகட்டத்துக்குள் பணி ஆணைகள் அனுப்பப்படவில்லை.
டி.என்.பி.எஸ்.சி. சம்பந்தப்பட்ட வழக்கு புலன் விசாரணை நீடிப்பதால், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் சற்று மாற்றம் செய்ய வேண்டுமென்று தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை நீதிபதி கே.சுகுணா விசாரித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தும் விசாரணையின் முடிவுக்கு, வி.ஏ.ஓ. பணி நியமனம் கட்டுப்பட்டது என்ற நிபந்தனையை கடந்த உத்தரவில் சேர்க்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இந்த நிபந்தனையுடன், பணி நியமன ஆணைகளை தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் இன்னும் 10 நாட்களுக்குள் டி.என்.பி.எஸ்.சி. அனுப்ப வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.