அரசு நியமித்த தற்காலிக பணியாளர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே அரசுப் பணிகளை மேற்கொள்ள 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை தமிழக அரசு தற்காலிகமாக நியமித்தது.
இந்த நிலையில் இவர்களுக்கு நிரந்தப் பணி வழங்குவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிறப்புத் தேர்வை நடத்தியது. அதற்காக விண்ணப்பங்களை வரவேற்றது. இதை எதிர்த்து தமிழக அரசு அலுவலக தற்காலிக இளநிலை உதவியாளர் சங்கம் உட்பட 92 பேர் மனுதாக்கல் செய்தனர். ஆனால் தேர்வு நடத்தப்பட்டு முதன்முதலாக 2008ஆம் ஆண்டு 4,103 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு அமைச்சுப் பணிகள் மற்றும் நீதித்துறை பணிகளில் அவர்கள் நியமிக்கப்பட்டனர்.
பின்னர் 2009-10ஆம் ஆண்டுக்கான இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வாணையத்துக்கு தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை கடிதம் எழுதியது. இந்த காலிப் பணியிடங்களில் தற்காலிக பணியாளர்களை அமர்த்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
இந்த மனுக்களை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு விசாரித்தார். அப்போது தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் உறுதிமொழி தரப்பட்டது.
2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிறப்புத் தேர்வை எழுதி, தகுதி பெற்றுள்ள அனைவரும் படிப்படியாக காலியிடங்களில் நிரப்பப்படுவார்கள். பணி நியமனத்தில் இடஒதுக்கீடு உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மனுதாரரின் மனுக்களை நீதிபதி நிராகரித்தார்.