சென்னை எழும்பூர்- வாரணாசி இடையே புதிய வாராந்திர விரைவு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமைதோறும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூர்- வாரணாசி- சென்னை எழும்பூர் இடையே புதிய வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர்- வாரணாசி (வண்டி எண்: 4259) வாராந்திர விரைவு ரயில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வரும் 12ஆம் தேதி முதல் வியாழக்கிழமைதோறும் மதியம் 1 மணிக்கு புறப்படும். சனிக்கிழமை காலை 4.50 மணிக்கு வாரணாசி போய்ச் சேரும்.
மறுமார்க்கத்தில், வாரணாசி- சென்னை எழும்பூர் (வண்டி எண்: 4260) வாராந்திர விரைவு ரயில் வாரணாசியில் இருந்து ஞாயிறுதோறும் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை 10.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
இந்த ரயிலில், ஒரு இரண்டு அடுக்கு ஏ.சி.பெட்டி, ஒரு மூன்று அடுக்கு ஏ.சி.பெட்டி, 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் பொதுப்பெட்டிகள் உள்ளன.
கூடூர், விஜயவாடா, நாக்பூர், கிட்டார்சி, ஜெபல்பூர், அலகாபாத் வழியாக இந்த ரயில் செல்லும். முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.