Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளவரசன் திவ்யாவுக்கு எழுதிய கடைசி கடிதம்

இளவரசன் திவ்யாவுக்கு எழுதிய கடைசி கடிதம்
, திங்கள், 8 ஜூலை 2013 (15:56 IST)
FILE
தர்மபுரி இளவரசன் இறப்பதற்கு முன் அவரது மனைவி திவ்யாவுக்கும், அவரது அப்பாவுக்கும் எழுதிய கடைசி கடிதங்களை இளவரசனின் நண்பனிடமிருந்து காவல்துறையினர் மீட்டு அவரது தந்தைக்கு கொடுத்துள்ளனர்.

தர்மபுரியில் ரெயில்வே தண்டவாளம் அருகே கடந்த 4 ஆம் தேதி காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசன் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டார் என்று அவரது தந்தை இளங்கோ, தாயார் கிருஷ்ணவேணி, மற்றும் அவரது வக்கீல் ரஜினிகாந்த், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தினர் ஆகியோர் கூறி வந்தனர். அவரது மரணம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்த சூழ்நிலையில் இந்த வழக்கில் நேற்று இரவு திடீர் திருப்பம் ஏற்பட்டது.

அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இளவரசன் இறப்பதற்கு முன்பு எழுதிய 4 பக்க கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை அவரது உறவினர் ஒருவரிடம் இருந்து காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தை இளவரசன் தனது பெற்றோருக்கும், காதல் மனைவி திவ்யாவுக்கும் எழுதி இருந்தார். அதில் இரண்டு பகுதியாக கடிதம் எழுதப்பட்டு இருந்தது. ஒரு பகுதி திவ்யாவுக்கும், இன்னொரு பகுதி தந்தை இளங்கோவுக்கும் எழுதப்பட்டு இருந்தது.

அதில் ‘தன்னுடைய சாவுக்கு நானே காரணம் என்றும், வேறு யாரும் காரணம் இல்லை’ என்றும் அந்த கடிதத்தில் இளவரசன் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் உள்ளது இளவரசன் கையெழுத்து தானா என்று உறுதிப்படுத்த நேற்று அவரது தந்தை இளங்கோ மற்றும் தாயார் கிருஷ்ணவேணி ஆகியோரிடம் கடிதத்தை காட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

webdunia
FILE
இளவரசன் எழுதிய கடித விவரத்தை தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் நேற்று நிருபர்களிடம் கூறி அந்த கடிதத்தில் உள்ளது இளவரசன் கையெழுத்து தானா என்பதை உறுதி செய்ய ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

அந்த கடிதத்தில் திவ்யாவுக்கு இளவரசனுக்கு எழுதி இருந்த விவரம் இன்று தெரிய வந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு, அன்புள்ள எனது திவ்யாவுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி எனக்கு மன அழுத்தம் இருக்கிறது என்று கூறினாய். தந்தை இறந்த துக்கத்தில் இருக்கும் உனக்கும், உனது தாயாருக்கும் நீ அங்கு சென்றால் ஆறுதலாக இருக்கும் என்பதால் உன்னை நான் அனுப்பி வைத்தேன்.

1 ஆம் தேதி மீண்டும் என்னுடன் வந்து விடுவாய் என்ற நம்பிக்கையில் நான் இருந்தேன். ஆனால் நீதிமன்றத்தில் மீண்டும் என்னுடன் செல்ல விருப்பம் இல்லை என்று கூறிவிட்டாய். கடந்த மாதம் 6 ஆம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை உன்னை பிரிந்து என்னால் வாழ முடியவில்லை. தினமும் உன் நினைவு தான் எனக்கு வந்தது.

நாம் இரண்டு பேரும் வேறு, வேறு இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எவ்வளவு பெரிய எதிர்ப்பு இருந்தது. அடுத்த ஜென்மத்தில் இரண்டு பேரும் ஒரே இனத்தில் பிறந்து நாம் சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறேன் என்று அந்தக் கடிதத்தில் அவர் திவ்யாவுக்கு எழுதி இருந்தார்.

தந்தை இளங்கோவுக்கு அவர் எழுதி இருந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது, நீங்கள் என்னை பெற்று ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தீர்கள். இதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. அடுத்த ஜென்மத்தில் நீங்களும், அம்மாவும் எனக்கு மகன்-மகளாக பிறக்க வேண்டும். இது உங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். அக்கா-அண்ணனை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் எழுதி உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil