சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், சமச்சீர் கல்வியை 10 நாளில் அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் 1, 6ஆம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடப்பாண்டில் 2,3,4,5,7,8,9,10 ஆகிய வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று கடந்த தி.மு.க. அரசு அறிவித்தது.
ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவதை அ.இ.அ.தி.மு.க. அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அதற்கான சட்ட திருத்தமும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் தேதி மேல்முறையீடு செய்தது. அதில், தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்ட திருத்தத்தில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
சமச்சீர் கல்விக்கு ஆதரவாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் சார்பிலும், எதிர்ப்பு தெரிவித்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் ஜே.எம்.பான்சால், தீபக்வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில், கடந்த 2 வாரங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 4ஆம் தேதியுடன் இந்த வழக்கில் வழக்கறிஞர்களின் வாதம் முடிவடைந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று காலை அளித்த தீர்ப்பில், சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட முடியாது என்றும், சமச்சீர் கல்வியை 10 நாளில் அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ஆட்சி மாறும்போது மாணவர் நலனை பாதிக்கும் வகையில் முடிவெடுக்க கூடாது என்றும் அரசின் நடவடிக்கை மாணவர் உரிமையை பறிக்கும் வகையில் இருக்கிறது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படும் முடிவுகள் மாணவர்களை பாதிக்கக் கூடாது என்று கூறியுள்ள நீதிபதிகள், படிப்புதான் மாணவர்களின் உரிமை என்று விளக்கம் அளித்துள்ளனர்.
25 காரணங்களை ஆராந்து தீர்ப்பை வழங்கியுள்ளதாக கூறிய நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழகத்தில் நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படுகிறது. 2 மாதங்களாக நீடித்து வந்த பிரச்சனை தற்போதுதான் முடிவுக்கு வந்துள்ளது.