பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் வருண்காந்தி பிரசாரம் செய்ய இருப்பதாக பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலர் எம்.எஸ். ராமலிங்கம் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து வருண் காந்தி பிரசாரம் செய்ய உள்ளார் என்றும் இதற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.
மே முதல் வாரத்தில் அத்வானி, நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி, யஸ்வந்த் சின்கா உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளார்கள் என்று தெரிவித்த ராமலிங்கம், இவர்களின் பிரசார பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
தென்சென்னையில் போட்டியிடும் மாநிலத் தலைவர் இல.கணேசன் வரும் 22ஆம் தேதியும், வட சென்னையில் போட்டியிடும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் 20ஆம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர் என்றும் சென்னையில் இன்று நடைபெறும் பா.ஜ.க வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்தில் வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார் என்றும் கூறினார்.