ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உள்ளிட்ட 9 பேருக்கு கீழ் நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக அதிகரித்து இன்று தீர்ப்பளித்தது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் ஜீவஜோதி.இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். ஜீவஜோதியை மறுமணம் செய்யும் நோக்கத்தில் சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று ராஜகோபால் கொலை செய்ததாக குற்றம்சாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம்,ராஜகோபாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. கொலைக்கு உடந்தையாக இருந்த டேனியல், கார்மேகம், ஹூசைன், காசி விஸ்வநாதன், தமிழ்செல்வன், முருகானந்தம், சேது, பட்டுரங்கம் ஆகியோருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. கடத்தல் வழக்கில் ராஜகோபாலுக்கு 3 ஆண்டும், மற்ற 8 பேருக்கு இரண்டு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த இரண்டு வழக்குகளிலும் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகோபால் உள்ளிட்டவர்கள் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.
அதே சமயம் அரசு தரப்பில், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டும் என்று அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, கீழ் நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிப்பதாக அறிவித்தது.
குற்றவாளிகளுக்கு இபிகோ 302 வது பிரிவின்படி( கொலை ) தண்டனை வழங்காமல், தண்டனை வழங்கியதில் கீழ் நீதிமன்றம் தவறிழைத்து விட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ராஜகோபால் தெளிவான நோக்கத்துடன் பயங்கர குற்றத்தை இழைத்திருப்பதாகவும், இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.