அனைத்து பயிர்களுக்கும் கூடுதலாக இழப்பீடு : ஜெயலலிதா கோரிக்கை
சென்னை , சனி, 7 பிப்ரவரி 2009 (12:55 IST)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், எந்தவித நிபந்தனையும் இன்றி கூடுதலாக அனைத்துப் பயிர்களுக்கும் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா, நிலவரி உயர்வு, கட்டாய வரி வசூலிப்பு ஆகியவற்றை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு இறுதியில் பெய்த பெருமழை காரணமாக தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்கதிர்களும், சம்பா, தாளடி பயிர்களும், கரும்பு, கடலை உள்ளிட்ட பயிர்களும் நீரில் மூழ்கியதோடு மட்டுமல்லாமல், சூறைக்காற்றில் தென்னை, வாழை மரங்கள் முற்றிலும் அழிந்து நாசமாகிவிட்டன. இதன் விளைவாக விவசாயிகளுக்குப் பெருத்த இழப்பு ஏற்பட்டது.பெருமழை காரணமாக பயிர்கள் அனைத்தும் முழுமையாக பாதிக்கப்பட்ட போதிலும், நிவாரணம் வழங்குவதில் விவசாயிகள் அலைக் கழிக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை நிலை. இது போன்ற பாதிப்புக்கு விவசாயிகள் ஆளாக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டிற்கான நிலவரி மற்றும் மேல்வரியை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளிடம் கட்டாயவரி வசூலை வருவாய்த் துறையினர் நடத்தி வருவதாகவும், வரி செலுத்தினால் தான் வெள்ள நிவாரண இழப்பீடு வழங்கப்படும் என்று மிரட்டுவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.எனது ஆட்சிக்காலத்தில், 2005 ஆம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்டபோது, அனைவருக்கும் தலா 2,000 ரூபாய் உள்ளிட்ட வெள்ள நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல், நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கு இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு 3,000 ரூபாயும், தென்னைக்கு ஏக்கர் ஒன்றுக்கு 4,800 ரூபாயும் வழங்கப்பட்டது.இது தவிர, வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட போது இரண்டு ஆண்டு காலத்திற்கு நிலவரி வசூல் தள்ளுபடி செய்து எனது ஆட்சிக்காலத்தில் உத்தரவிடப்பட்டது.தற்போது அனைத்துப்பொருட்களின் விலைகளும் மூன்று மடங்கு உயர்ந்துள்ள சூழ்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், எந்தவித நிபந்தனையும் இன்றி, எனது ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டதை விட மும்மடங்கு கூடுதலாக அனைத்துப் பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, நிலவரி உயர்வு, கட்டாய வரி வசூலிப்பு ஆகியவற்றை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.