தா.பாண்டியன் கார் எரிப்பு : வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர் கண்டனம்
சென்னை , வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (13:37 IST)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியனின் கார் எரிக்கப்பட்டதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பா.ஜ.க.வின் தேசிய செயலர் திருநாவுக்கரசர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் , சென்னை, முகப்பேரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியன் இல்லத்தில் இருந்த அவரது காரையும், இரு சக்கர வாகனத்தையும் ஒரு கொடிய நோக்கத்தோடு சில கயவர்கள் தீ வைத்துக் கொளுத்தியுள்ளார்கள்.தா.பாண்டியன் சுற்றுப்பயணத்தில் இருந்த சமயத்தில், வீட்டில் அவரது துணைவியார் மட்டும் இருந்த நிலையில் இக் கொடுஞ்செயல் நடந்துள்ளது. ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கவும், இந்திய அரசின் துரோகத்தை எதிர்க்கவும் தோழர் தா.பாண்டியன் உரத்த குரல் எழுப்பி வருவதால் சில தீய சக்திகள் இந்த வன்முறையைச் செய்துள்ளன.இதில் ஈடுபட்டவர்கள், தூண்டி விட்டவர்கள் யார் என்பதைக் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு கண்டுபிடித்து, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவிப்பதோடு, இதில் ஈடுபட்ட வன்முறையாளர்களுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார், இரு சக்கர வாகனங்கள் நேற்று நள்ளிரவு வேளையில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. இந்த வன்முறைச் செயல் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது.தோழர் தா.பாண்டியன் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்திய- சிங்கள அரசுகள் நடத்தும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு தோழமை இயக்கங்களோடு இணைந்து போராடியும் வருகிறார். குறிப்பாக, இந்திய அரசின் துரோகத்தை மிகக் கடுமையாகவும் வெளிப்படையாகவும் விமர்சித்து வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த வன்முறைக் கும்பல் தான் இத்தகைய இழிசெயலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று நம்ப முடிகிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போருக்கு எதிராக இவ்வாறான தாக்குதல் நடைபெறுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இயக்குநர் சீமான் காரை எரிக்க முயற்சி நடந்தது. மீண்டும் அதைப் போலவே கார் எரிப்பு வன்முறை அரங்கேறியிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டோரின் செயல்தான் இது என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, குறிப்பாக இந்திய அரசின் போக்கைக் கண்டித்துச் செயல்பட்டு வரும் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், இவ்வாறான வன்முறைகள் பரவாமல் தடுக்கவும் ஆவன செய்யுமாறு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
பா.ஜ.க. தேசிய செயலர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பொதுச் செயலர் தா.பாண்டியன் இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரையும், இரு சக்கர வாகனத்தையும் இன்று விடியற்காலை சில வன்முறையாளர்கள் டீசல் ஊற்றி கொளுத்தி எரித்து, சேதப்படுத்தி இருக்கிற காட்டு மிராண்டித்தனமான வன்செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.தா.பாண்டியன் ஊரில் இல்லாத சமயத்தில் இந்த அக்கிரமச் செயல் நடந்துள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தா.பாண்டியன் தீவிரமாக, ஆதரவாக செயல்படுவதால் அவரை அச்சுறுத்தும் விதத்தில் நாகரீகமற்ற சிலர் இவ்வன்முறை செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. காரணம் எதுவாயினும், இந்த வன்முறைச் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரென கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும், காவல்துறையையும் பா.ஜ.கட்சியின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் , ''தா.பாண்டியன் கார் மீது பெட்ரோல் குண்டுவீசி எரிக்கப்பட்ட சம்பவம் கோழைத்தனமான செயலாகும். இது திட்டமிட்ட சதி. இதனைக்கண்டு நாங்கள் அஞ்சப் போவதில்லை. இலங்கை தமிழர்களை பாதுகாக்க தொடர்ந்து போராடுவோம்'' என்று கூறியுள்ளார்.