ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த முத்துக்குமாரின் உடல் இன்று இரவு தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஈழத் தமிழர்களுக்காக உனது உயிரை தியாகம் செய்த முத்துக்குமாரின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக கொளத்தூரில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மாலை 4 மணிக்கு முத்துக்குமாரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் பழ.நெடுமாறன், வைகோ, ராமதாஸ், தொல்.திருமாவளவன், ஏ.கே.மூர்த்தி, திருநாவுக்கரசர், த.வெள்ளையன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முத்துக்குமார் இறுதி ஊர்வலம் கொளத்தூரில் தொடங்கி செம்பியம் பேப்பர் மில் சாலை வழியாக பெரம்பூர் ஜமாலியா, ஓட்டேரி பாலம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக சூளை கண்ணப்பர் திடல் யானைகவுனி பாலம் வழியாக வால்டாக்ஸ் சாலை சென்று மூலக்கொத்தளத்தை அடைந்தது. அங்கு முத்துக்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தையொட்டி ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.